பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது..... நவகிரங்களில் புதன்.....


பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. சூரியனுக்கு மிக அருகில் சஞ்சரிக்கும் கிரகம் புதன்  என்பதால் சூரிய வெப்பபொழிவு காரணமாகபுதனைக் காண்பது மிகவும் அரிது. ஆகையால் தான் இந்த பழமொழியை பெரியவர்கள் நமக்கு சொல்லியுள்ளார்கள். 

சூரிய வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள வளிமண்டலம் இல்லாததால் மற்ற கோள்களை விட புதனின் மேற்பரப்பு பெரும் வெப்பநிலை மாற்றங்களை காண்கிறது.  புராணக்கதைகளில் பார்த்தோமே என்றால் சந்திரனுக்கும், தாராதேவிக்கும் பிறந்தவர் தான் புதன். 

தாராதேவி யாரென்பது நான் விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கின்றேன். ரோகிணியின் அன்பால் வளர்க்கப்பட்ட புதன் வாலிப வயதை அடைந்ததும் தன்னுடைய தந்தையும் குருவுடைய மனைவி தாராதேவியும் செய்த தவறினால் தன்னுடைய பிறப்பு நிகழ்ந்ததை நினைத்து மனம் வெறுத்து இமயமலைச் சாரல் சென்று தன்னிச்சையாகவே தவம் செய்யத் தொடங்கினார். 

குருவினுடைய அனுகிரகம் இல்லாமல் பல கலைகளையும் கற்று தேர்வது சிரமம் என உணர்ந்த புதன் ஸ்ரீமன் நாராயணனை நோக்கி தவம் புரிந்து அவருடைய அருள் பெற்று குருவே இல்லாமல் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். 

குருவின் வழிகாட்டுதல் இல்லாமலே தேர்ச்சி பெற்றவர் புதன். இவ்வாறு சிறப்பாக சென்று கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையில் பெண்களே கண்டு பொறாமைப்படும் அளவிற்கு அழகின் பிம்பமாய் தோன்றியதேவலோகமாது புதனுடையஅழகில் மயங்கி தனக்கு இன்பம் தரவேண்டினார். 

தன்னை போல் இனி ஒரு குழந்தை பிறக்கக்கூடாது என்று எண்ணியபுதன் தேவலோகமாதுவின் கோரிக்கையை நிராகரித்தார். கோபமடைந்தஅந்த தேவலோகமாது புதனை அலியாக மாறசபித்துவிட்டார். மனம் நொந்தபுதன் நாராயணனின் காலடியைபற்ற   தன்னுடைய மறுஉருவமான புதனுக்கு தன்னால் சாபநிவர்த்தி அளிக்க முடியாது என்று கூறி புதனை  சிவனிடம் சரணடையச் சொன்னார். நாராயணனின் உத்தரவுக்கிணங்க புதன் சாபவிமோசனம் பெற்றஸ்தலம் தான் திருவெண்காடு.  



Leave a Comment