தோஷங்களை நீக்கும் மாசி மகம் புனித நீராடல் 


கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக கொண்டாடப்படுகிறது. மாசி மகம் மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்.

மாசி மகத்தன்று ஆறுகள், அருவிகள், நதிகள், கடலில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம்.  இந்த நாளில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் அதிகாலை முதலே மக்கள் புனித நீராடி இறைவனை வழிபடுவார்கள். திருச்செந்தூரில் தேரோட்டமும், திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்சவமும் நடைபெறும். தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றிய மக்கள் தங்களின் பிரார்த்தனை நிறைவேற வேண்டிக்கொள்வார்கள்.

உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.

சிவன், விஷ்ணு,முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.



Leave a Comment