கார்த்திகை மாத சிறப்புக்கள்


கார்த்திகை மாத சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான்.

ஐப்பசி கார்த்திகை அடைமழை என்பது பழமொழி. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம் ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

இம்மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடத்தப்பெறுவதால் இது திருமண மாதம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

திருமால் துளசியை இம்மாத வளர்பிறை துவாதசியில் திருமணம் செய்து கொண்டார். எனவே இம்மாதம் முழுவதும் துளசித் தளங்களால் அர்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசித் தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமாவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.



Leave a Comment