தீராத நோய் தீர்க்கும் கோயில்கள்!


சென்னை - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள எல்லம்மனுக்கு சர்க்கரைக் காப்பு செய்து வழிபட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கோவை-மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் அருளும் வனபத்ரகாளியம்மன் செய்வினை, பில்லி சூனியம் போன்றவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை நலம்பெறச் செய்கிறாள்.

நாகர்கோவில் அருகே, மண்டைக்காட்டில் பகவதி அம்மன் அருள்புரிகிறாள். பச்சரிசிமாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து மண்டையப்பம் எனும் பிரசாதத்தை செய்து இந்த அம்மனுக்குப் படைக்க தீரா தலைவலியும் நீங்கிவிடும்.

தூத்துக்குடி, வசவப்பபுரத்தில் அலங்காரச்செல்வி அம்மன் அருள்புரிகிறாள். கனவுத் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அன்னையை தரிசித்து, அதிலிருந்து விடுபடுகின்றனர்.

சென்னை, மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் கோயில் கொண்டுள்ள கடும்பாடிச் சின்னம்மனுக்கு உப்பு, மிளகு செலுத்துவதாக வேண்டிக்கொண்டால் சரும நோய்கள் நீங்குகின்றன. அம்மை நோயை கருவறையில் வழங்கப்படும் சங்கு தீர்த்தம் தீர்க்கிறது.

கோவை - பெருமாநல்லூரில் கோயில் கொண்டுள்ள கொண்டத்துக்காளியம்மன், சரும நோய்களை நீக்கியருள்கிறாள்.
மூலஸ்தானத்தில் மாரி, காளி என இரு அம்பிகைகள் வீற்றருளும் தலம், நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள சந்தைக்கடை மாரியம்மன் கோயில். கண் நோய் மற்றும் பிற கொடிய நோய்களையும் இந்த இரட்டை அம்பிகையர் தீர்க்கிறார்கள்.

திருவிடைமருதூரில் உள்ள வனதுர்க்கா பரமேஸ்வரி அம்பிகை, மகப்பேறு தடைகளை நீக்கி, குழந்தை வரம் தருகிறாள்.

திருச்சி - பெரம்பலூர், சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருந்து காக்கிறாள். உடலில் எந்த நோய் கண்டாலும் இந்த அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டு, ஆலயத்திலேயே மாவிடித்து, மாவிளக்கேற்றி, ஆலய பிராகாரத்தில் படுத்து அந்தந்த உடல் பாகத்தில் மாவிளக்கை வைத்து வேண்டிக்கொள்ள அந்த நோய் மாயமாய் மறைந்துவிடுகிறது.

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் நம்புநாயகி அம்மன் கோயில் கொண்டுள்ளாள். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள திருக்குள தீர்த்தங்கள் பல்வேறு நோய்களைப் போக்குபவை. எனவே சர்வரோக நிவாரண தீர்த்தங்கள் என அழைக்கப்படுகிறது. அம்பிகையே தீர்த்தங்கள் வடிவில் அருள்கிறாள்.

சென்னை, மயிலாப்பூர் கச்சேரி சாலை பகுதியில் உள்ள முண்டகக் கண்ணியம்மன், கண்நோய்களை நீக்குவதில் நிகரற்றவளாக விளங்குகிறாள்.

திண்டுக்கல், நத்தத்தில் உள்ள மாரியம்மன், எல்லா பிணிகளையும் தீர்த்தருள்கிறாள். அன்னையின் அருளால் பலன் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டுதல், தீச்சட்டி எடுத்தல் என நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

நவபாஷாணத்தால் ஆன அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை அம்மனை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிச்சியில் தரிசிக்கலாம். தீராத நோய்களையும் இந்தத் தாய் தீர்த்தருள்கிறாள்.

நாமக்கல், ராசிபுரத்தில் உள்ள நித்யசுமங்கலி மாரியம்மனுக்கு கண்மலர் வாங்கி சாத்தினால் கண் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.

விஜய ஜெய சாமுண்டீஸ்வரி எனும் பெயரில் தவக்கோல அம்பிகையை கல்பாக்கம், புதுப்பட்டினத்தில் தரிசிக்கலாம். இந்த அம்பிகை மன அமைதி தந்து காப்பவள்.

கோயமுத்தூரில் அருளாட்சி புரிந்து வரும் கோனியம்மன், தீராத நோய்களை தீர்த்தருள்பவள் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

தஞ்சாவூர், வல்லத்தில் அருளும் ஏகெளரி அம்மன், தன் பக்தைகளின் கணவர்களை நோய்களிலிருந்து காக்கிறாள். அப்படி பயன்பெற்ற பக்தைகள் ஆலயத்திற்கு எருமைக்கன்றை தானமாக வழங்குகின்றனர். குழந்தைப் பேற்றில் தடை உள்ள பெண்கள் இந்த அம்பிகையின் சந்நதியில் தரப்படும் எலுமிச்சை சாற்றை அருந்த, அவர்களுக்கு அந்த பாக்கியம் எளிதாகக் கிட்டுகிறது.

திருக்கருகாவூரில் அருளும் கர்ப்பரட்சாம்பிகை கர்ப்பப் பை சம்பந்தமான பிணிகளை நீக்கியருள்கிறாள்.

திருவண்ணாமலை, சந்தவாசலில் கோயில்கொண்டிருக்கும் கங்கையம்மனுக்கு அபிஷேகம் செய்த நீர், தீராத நோய்களை தீர்க்கிறது.

சிவகங்கை - நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி கண் சம்பந்தமான நோய்களைத் தீர்த்தருள்கிறாள்.



Leave a Comment