குரு பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்


மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

பொதுவாக மிகவும் சாதுவான தோற்றத்தைக் கொண்டவர்களான நீங்கள் பார்வைக்குத் தான் அப்படியே தவிர, மற்றபடி அறிவுக்கூர்மையும் அன்புள்ளமும் செயலாற்றலும் மிக்கவர்கள்தான். தேவையான நேரத்தில் அவற்றையெல்லாம் முழுமையாக வெளிப்படுத்தி பிறரை வியப்படையச் செய்வீர்கள். தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகித் தவிப்பதைத் தவிர்த்தால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிட வாய்ப்புண்டு. மற்றவர்களிடம் கை நீட்டி நின்று சேவகம் புரியும் அவசியம் இல்லாமல் பலரையும் அதிகாரம் செலுத்தி வேலை வாங்கும் அமைப்புடையவர்கள் நீங்கள். சுயமாகத் தொழிலோ, வியாபாரமோ செய்வதிலும், மற்றவர்கள் பலரையும் அனுசரித்துப் போவதிலும், விருப்பம் மிகக்கொண்ட உங்களுக்கு, இந்த குருப் பெயர்ச்சி பலனைப் பார்ப்போம்.

கிரகநிலை:
இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து உங்களது தனவாக்கு குடும்ப ஸ்தானம் - தொழில் ஸ்தானம் - விரைய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.

மற்ற கிரகங்களின் நிலை:
ராகு உங்களது ராசிக்கு தனவாக்கு குடும ஸ்தானத்திலும் - சனி சப்தம ஸ்தானத்திலும் - கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

இந்த குருப் பெயர்ச்சியில் உழைப்பு கூடினாலும் அவற்றுக்கு இரட்டிப்பான வருமானம் கிடைக்கும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தி விடுவீர்கள். அதேநேரம் எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரைகள் கூற வேண்டாம். வாழ்க்கை சலிப்பு தட்டிவிட்டது என்றிருந்தவர்களுக்கு அது மாறி நம்பிக்கை துளிர்விடும். வெளிநாடுகளுக்கு உத்தியோகம், கல்வி ஆகியவற்றிற்காகப் பயணம் செய்ய நேரிடும். அதோடு சமூகத்தின் மேல்தட்டு மக்களின் நட்பு கிடைக்கும். கடினமான வேலைகளையும் சரியாக முடித்து உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆக அரசாங்க அதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு
உங்கள் பணிகளில் கவனக் குறைவு கூடாது. சக பணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள். மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை. நீங்கள் எதிர்பார்த்த்படி சிலருக்கு இடமாற்றங்கள் கிடைக்கக் கூடுமாயினும் உங்களுக்குத் திருப்திதர முடியாதபடி கடுமையான வேலைப் பளு நிறைந்ததாக இருக்கக் கூடும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறக்கூடிய வகையிலும், புகார் எழ வாய்ப்பில்லாத நிலையிலும் உங்கள் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வருவது அவசியம். சக பணியாளர்களிடம் பணிவாகவும் சுமூகமாகவும் பழகி வருவதன் மூலம் பெரும்பாலான சங்கடங்களைத் தவிர்க்கலாம். உடல் நலத்திலும் கவனம் செலுத்துவது அவசியம்.

வியாபாரிகளுக்கு
உங்கள் எதிரிகள் உங்களுக்குப் போட்டியாகக் கடுமையாக இயங்கக் கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நீங்கள் புதுமையாக ஏதேனும் சலுகைகளை அறிவித்து அவர்களை உங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் குறைந்தபட்ச லாபத்துடன் நடைபெற்று வர வழிவகுக்கலாம். வேலையாள்களின் நடாவடிக்கைகளைக் கண்காணித்து வருவதன் மூலம் விரையங்களைத் தவிர்க்கலாம். வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் கடன் நிலுவை இல்லாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

கலைத்துறையினருக்கு
புதிய வாய்ப்புகள் அமைவதற்குரிய நிலை சாதகமாக இல்லை என்றாலும் கடுமையாக உங்கள் முயற்சிகளைத் தொடர்வது அவசியம். உங்கள் வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும். எல்லாரிடமும் இனிமையாகப் பேசி பழகுங்கள். இசை, நடனக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் போன்ற பிரிவினர் கூடுதல் வாய்ப்புகளைப் பெறக்கூடும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளும் போது மிகுந்த நிதானமாகவும், சிக்கனமாகவும் நடந்து கொள்வது அவசியம். புதிய வாய்ப்புகள் கிட்டும். அதன் மூலம் நற்பெயர் கிட்டும்.

மாணவர்களுக்கு
விளையாட்டை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.சிலர் படிப்பை நிறுத்தி விட்டு உத்தியோக வாய்ப்புகளைப் பெறவும் முயலக் கூடும். விளையாடும் போதும் வாகனங்களிலும் கவனம் தேவை. முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பெயர்ச்சியாக அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள் மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம். வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதே நேரம் பயணங்களில் வெற்றியடைவீர்கள்.

பெண்களுக்கு எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உடல் நலத்தில் அக்கறை தேவை. கருவுற்ற பெண்களுக்கு கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நன்மைகளுக்கு வழிவகுக்கும். யாரிடமும் தேவையில்லாத பேச்சுகளை பேச வேண்டாம்.


நட்சத்திரப் பலன்கள்:
மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் எளிதில் முடியாமல் தாமதம் ஆகக் கூடும் என்பதற்காக நீங்கள் அவசரப் படாதீர்கள். இறைவழிபாடு, தியானம் போன்றவற்றில் மனத்தைச் செலுத்துவது நல்லது. சிலர் விருதுகள், பாராட்டுகள் போன்றவற்றை பெற வாய்ப்புண்டு.பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் இருப்பவர்கள் சாதகமான தீர்ப்பைப் பெறுவது சாத்தியமாகும்.

திருவாதிரை: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் தொழில் , வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த பட்ச ஆதாயத்தைப் பெறக்கூடும். நஷ்டம் பற்றிக் கவலைப்படாதீர்கள். அதற்கு வாய்ப்பு இல்லை. உறவினரின் ஒத்துழைப்பை எல்லாம் பெருமளவில் எதிர்பார்ப்பதற்கில்லை. பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிறமொழி பேசும் ஒருவரால் நன்மை உண்டாகும். தொழில் முயற்சிகளில் கவனம் தேவை.

புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்: குருப் பெயர்ச்சியின் மூலமாக உத்தியோகஸ்தர்களில் சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு இப்போது நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பெரும்பாலானவர்களுக்கு இனம் புரியாத தேவையற்ற மனக்கலக்கம் ஏற்பட்டு நிவர்த்தியாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி தள்ளிப்போகலாம். கடன் கிடைக்குமாயினும் வாங்காமலேயே சமாளிப்பது பிற்காலத்திற்கு உதவியாக அமையும். ஜாமீன் கையெழுத்துபோட்டு கடன் வாங்கித் தர முயற்சிக்காதீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசியை அர்ப்பணித்து 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியைப் பரப்பி பெரிய தேங்காயை உடைத்து, தேங்காயில் நெய் விளக்கு ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன்

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி


+ குடும்பத்தில் சந்தோஷம் : - தொழிலில் சுணக்கம்

 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
போன்: 7845 11 9542



Leave a Comment