விநாயகர் பிறந்த கதை....


பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே அதில் இருந்து சிந்தூரனன் என்ற ஓர் அரக்கன் தோன்றினான். அவனுடைய சிவந்த தேகத்தைப் பார்த்து பயந்த பிரம்மா, முன்னெச்சரிக்கையாய் அவன் கேட்காமலேயே அவனுக்கு சில வரங்களைத் தந்தார். கேட்காமலேயே வரம் கிடைத்த மமதையில் மூவுலகையும் ஆட்டிப் படைத்தான் அரக்கன். மும்மூர்த்திகளே செய்வதறியாமல் திகைக்க கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, “கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திருவயிற்றில் அவதரிப்பேன்” எனக் கூறி மறைந்தார்.

கருவுற்று உமாதேவியாரின் திருவயிற்றில், காற்றாக நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட, தலையே இல்லாமல் பிறந்த குழந்தையைப் பார்த்து அனைவரும் பதறவே கலங்காதே என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். கஜானனன் ஆனார் விநாயகப் பெருமான்.

உமாதேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரனனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் "சிந்தூர விநாயகர்" என்ற பெயரும் பெற்றார். இது தான் பார்கவ புராணம்.



Leave a Comment