சுப்பிரமணியருக்கு...வைர கிரீடம் அணிவிப்பு!


திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி தேர் திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று காலை 6 மணிக்கு ஆறுமுக பெருமானின் உருகு சட்ட சேவை நடைபெற்றது. நேற்று இரவு சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி எழுந்தருளி டவுனுக்கு சென்றார். டவுன் திருப்பணி முக்கில் சுவாமிக்கு வைர கிரீடம், வைர வேல் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று டவுனில் சுவாமி வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியும் காட்சி அளிக்கிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 25-ந்தேதி(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 26-ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 27-ந்தேதி இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் செய்து உள்ளனர்.



Leave a Comment