பகவதியம்மன் கோவில்...பரிகார பூஜை!


குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோபுரம் கட்டும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. திருப்பணிகளை விரைந்து முடித்து கலசாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கலசாபிஷேகம் நடத்துவதற்கு தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் 22-ந் தேதி நடந்தது. தேவ பிரசன்னத்தில் பல்வேறு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து தேவி சேவா சங்கம் ஏற்பாட்டில் பரிகார பூஜைகள் நேற்று தொடங்கியது.

இந்த பூஜைகள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து புண்யாகம், மகா மிர்த்திஞ்ஜய ஹோமம் போன்றவை நடந்தது. பரிகார பூஜையை பாறசாலை ராஜேஷ் நம்பூதிரி, ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடத்தினர். இதில் கோவில் தந்திரி மகா தேவரு அய்யர், தேவி சேவா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.



Leave a Comment