சுப்பிரமணிய சுவாமி வெள்ளை நிற யானை வீதி உலா!


ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானையின் உடல் முழுவதும் திருநீறு பூசி வீதி உலா வந்தது. வெள்ளை யானை முன் செல்ல, சுந்தர மூர்த்தி நாயனார் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது.

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கயிலாய மலைக்கு வெள்ளை யானையை அனுப்பி 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரை அழைத்து வந்ததாக வரலாறு உண்டு. இதனை நினைவு கூறும் வகையில், திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளை யானை முன்னே செல்ல சுந்தரமூர்த்தி நாயனார் தங்கச் சப்பரத்தில் உலா வரும் வைபவம் ஒவ்வொரு ஆண்டும் சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறுவது வழக்கம்.

இதனை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடந்தது. பின்னர் திருக்கோயிலில் உள்ள யானையின் உடல் முழுவதும் விபூதி பூசப்பட்டு வெள்ளை நிற யானையாக மாற்றப்பட்டது.

தொடர்ந்து, 108 மகாதேவர் சன்னதியில் இருந்து திருநீறு பூசிய யானை முன்செல்ல, சேரமான் பெருமானும், மாணிக்கவாசகரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி, யானையின் பின்னால் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள், உள்மாட வீதிகள் மற்றும் ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து மீண்டும் திருக்கோயிலை அடைந்தது.



Leave a Comment