சாப விமோசனம் தரும் பஞ்சட்டி அகத்தீஸ்வரர்


பஞ்சட்டி அகத்தீஸ்வரர் கோவில் சென்னை - கல்கத்தா நெடும் சாலையில் வழியில் உள்ளது. காரனோடை மற்றும் பெரியபாளையம் ஜங்ஷன் தாண்டி நேராக செல்ல வேண்டும். தொடர்ந்து கல்கத்தா தேசிய நெடும் சாலையில் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் சென்று வலது பக்கம் திரும்ப வேண்டும். உல் சாலையில் ஒரு முந்நூறு அடி சென்று இடது பக்கம் திரும்பினால் கோவில் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே பஞ்சேஷ்டியில் (பஞ்செட்டி) அமைந்துள்ளது ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. விஷேச நாட்களில் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் முக்கிய சிவ ஸ்தல மாக உள்ளது.

கோவிலின் தல வரலாற்றில், கோவிலின் கிழக்கு பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் அகத்தியர் தீர்த்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தல வரலாற்றின்படி ஒரு முறை சுகேது என்ற அரக்கன் மகிஷாரண்யம் என்ற வனத்தில் இருந்த மகா ராட்சதர்களான மத்தன், உன்மத்தன், பிரமத்தன் என்பவர்களோடு சண்டையிட்டு சோர்ந்து போய் கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான். இதையறிந்த சுகேதுவின் மூன்று மகன்களும் ஒன்று சேர்ந்து அந்த மூன்று மகா ராட்சதர்களையும் கொன்று போட்டு, பின்னர் தங்கள் தந்தையை தேடி கடலை கலக்கினர்.

இதனால் உலகில் பிரளயம் ஏற்பட்டு அனேக உயிர்களும் அவதிப்பட்டதை கண்ட அகத்திய முனிவர், சமுத்திரத்தை பானகம் போல் அருந்திவிட்டார்.சமுத்திரம் வரண்டதால் வேதனையடைந்த வருடன், குபேரன் ஆகியோர் அகத்திய முனிவரிடம் பணிந்து வேண்டியதால் சமுத்திரத்தை முதலில் கொஞ்சம் உமிழ்ந்து பஞ்சேஷ்டி தலத்தில் ஒரு புண்ணிய தடாகத்தை அகத்தியர் ஏற்படுத்தினார். பின், தன்னுள் மீதமிருந்த சமுத்திரத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்றார்.

அகத்திய முனிவரின் வயிற்றில் சிக்கிக்கொண்ட சுகேதுவும் அவனது மகன்களும் தங்களின் பாவ விமோசனத்திற்காக அகத்திய முனிவரை மனம் உருகி வேண்டினர். மனம் இறங்கிய அகத்தியரும் அவர்களை, தான் உருக்கிய புண்ணிய தடாகத்தில் (அகத்திய தீர்த்த குளம்) மூழ்க செய்து சிவாலயத்தில் ஐந்து யாகங்கள் (தேவயாகம், பிரம்மயாகம், பூதயாகம், பிதுர்யாகம், மானுடயாகம்) வளர்க்க ஏற்பாடு செய்தார்.பஞ்சேஷ்டி (பஞ்ச-ஐந்து, இஷ்டி-யாகம்) திருத்தலத்தில் ஐந்து யாகங்களை வளர்த்து அந்த யாக விபூதியை சுகேது மற்றும் அவனது மகன்களுக்கு பூசி அவர்களுக்கு பரமபதம் அருளினார் அகத்தியர்.அகத்திய முனிவர் கூறியபடி சுகேது அரக்கனும் அவனது குடும்பத்தினரும் அகத்திய தீர்த்த குளத்தில் மூழ்கி, சிவனை வழிபட்டு யாகம் வளர்த்து சாபவிமோசனம் பெற்றதால், அங்கு வரும் பக்தர்களும் அந்த குளத்தில் மூழ்கி சிவனை வழிபட்டால் சாப விமோசனம் பெறுவதாக ஐதீகம்.



Leave a Comment