திருப்பதியில் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 10ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனால் அன்று 6 மணி நேர தரிசனம் நிறுத்தப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய தினங்களுக்கு முன் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் கோயில் தூய்மை பணி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி ஏழுமலையான் கோயிலில் வரும் 17ம்தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனால் வரும் 10ம்தேதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. அன்று காலை 6 மணி முதல் சுமார் 5 மணி நேரத்திற்கு கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் சுத்தம் செய்யப்பட உள்ளது. பின்னர் கஸ்தூரி மஞ்சள், கிச்சலிக்கட்டை, திரிசூணம் உட்பட பல்வேறு மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட கலவை கோயில் சுவற்றில் தெளிக்கப்படுகிறது.

இதனால் அன்று சுமார் 6 மணி நேரத்துக்கு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.



Leave a Comment