காக்கும் கணபதியின் பரிகார தலங்கள்?


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சந்நதி செல்லும் வழியில் ஒரு தூணியில் ‘விநாயக தாரணி’ எனப்படும் பெண்வடிவ விநாயகியை பார்க்கலாம். இவருக்கு ‘சந்தனக்காப்பு’ அலங்காரம் செய்து வணங்கினால் பெண்களுக்கு திருமண தோஷம் விலகும்.

சென்னை சவுகார்பேட்டையிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள ‘சகோதர விநாயகரை’ வணங்கினால் பிரிந்திருக்கும் சகோதரர்கள் ஒன்று கூடுவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள கீழ ஆவணிமூல வீதி பைரவர் கோயிலுள்ள ‘சோம சூரிய கணபதி’யை அமாவாசை நாளில் வேண்டிக்கொள்ள கிரக, நாக தோஷம் விலகும்.

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் போல திருத்துறைப்பூண்டி அருகில் இடும்பாவனம் சற்குணநாதர் கோயிலிலும் கடற்நுறையாலான வெள்ளை விநாயகர் அருள்கிறார். இவருக்கு பால், பன்னீர் அபிஷேகங்கள் செய்து வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும்.

கும்பகோணம் அருகிலுள்ள கொட்டையூர் கோடி விநாயகரை வழிபட்டு பின் மற்ற தெய்வங்களை வழிபட்டால் கோடி செல்வங்கள் பெறலாம் என்பது ஐதீகம்.

ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை கோயிலின் கொடிமரம் அருகே தெற்கு நோக்கி அமைந்துள்ள ‘கண் கொடுத்த விநாயகரை’ அங்குள்ள புஷ்கரணியில் 48 நாட்கள் நீராடி வணங்கிவர கண்பார்வை கோளாறு குணமாகுமாம்.

காரைக்குடி அருகே உள்ள மாத்தூரிலும், சிவகங்கை மாவட்டம் பி.அழகாபுரியிலும் ‘கலங்காத கண்ட விநாயகர்’ கோயில்கள் உள்ளது. கடன் பிரச்னையால் வாடுபவர்கள் இவர்களிடம் முறையிட கடன் பிரச்னை தீரும்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலுள்ள விநாயகரை ‘புரமோஷன் விநாயகர்’ என்கிறார்கள். இவருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வேண்டினால் பணி உயர்வு கிடைக்குமாம்.

கோவை மாவட்டம் நெகமம் அருகிலுள்ள தேவனாம்பாளையத்தில் உள்ள அமணீஸ் வரர் கோயிலுள்ள அம்பாள் பாதத்தின் கீழ் உள்ள சதுர் விநாயகர்களை வணங்கினால் தாய், பிள்ளைகளுக்கு இடையேயான மனக்கசப்பு தீரும்.

தேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள சுருளி மலை அருவியின் அடிவாரத்திலுள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் தனிச்சந்நதியில் ‘கால் நடைகளைக் காக்கும் கணபதி’ உள்ளார். பால் சுரப்பதில் குறைபாடு இருந்தாலோ இவரை வேண்டிக்கொள்ள குணமாகும்.

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுள்ள ‘மும்முடி விநாயகரை’ வேண்டிக்கொள்ள முன்னோர்கள் ஆத்ம சாந்தி அடையும். நினைத்த பேறுகளையும் அடையலாம்.

உடுமலைப்பேட்டையிலுள்ள பிரசன்ன விநாயகர் கோயிலில் உள்ள மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் நின்று விநாயகரை வணங்கினால் அவரவர் ராசியில் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயிலில் மூலஸ்தானத்தில் சுயம்பு மூர்த்தியாக 11 விநாயகர்கள் தன் அருகிலேயே கொடிமரமும் கொண்டு அருள்பாலிக்கிறார்கள். திருமணத்தடை மற்றும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன் கிடைக்கும்.

பொள்ளாச்சி அருகிலுள்ள குமாரலிங்கம் தத்தாத்ரேயர் சுவாமி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் கோயில்களில் விநாயகர் வயிற்றில் ராகு, கேது எனும் பாம்புகள் பின்னியுள்ள நிலையில் இருப்பார்கள். இவர்களை வணங்கினால் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்கள் தீரும் என்பது ஐதீகம்.

விநாயகரின் நர்த்தனக் கோலம் மிகவும் அபூர்வமான ஒன்று. இப்படிப்பட்ட கோலத்தை திருப்பூர் அருகிலுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இவரை வழிபட்டு இனிப்பு நைவேத்யம் படைத்தால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.



Leave a Comment