கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் நடும் திருவிழா


கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாக இருக்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் விமரிசையாக நடக்கும் நிகழ்வுகளாகும்.

இந்த ஆண்டு கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 13-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து மூன்று கிளையுடைய வேப்பம் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் பலி பீடம் எதிரே நட்டு வைத்தனர்.

பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை சூட்டி அலங்கரித்து வைக்கப்பட்டது. இந்த கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் புனித நீரை எடுத்து வந்து குடம், குடமாக ஊற்றி வழிபட்டனர். கடந்த 18-ந்தேதி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மதியம் 1.30 மணி வரை கம்பத்திற்கு புனித நீர் ஊற்ற அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் கோவில் நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை.

அதன்பின்னர் புனித நீர் ஊற்றி கோவிலை சுத்தம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் பலி பீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நின்றனர். மாலை 5.15 மணியளவில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பூசாரி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது விண்ணதிர மேள-தாளங்கள் முழங்கின. பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் தயார் நிலையில் இருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்குள் கம்பம் வைக்கப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது.

இரவு 7 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடைந்தது. மாவடி ராமசாமியாக அரிவாளுடன் முன்னே மருளாளி செல்ல அதனை பின்தொடர்ந்து கம்பம் ஆற்று பகுதிக்குள் சென்றது. அப்போது ஓம் சக்தி... பராசக்தி... என பக்தர்கள் கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்கினர்.

பின்னர் அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர்.

அந்த சமயத்தில் பக்தர்கள் மீது அகழியில் இருந்த புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் பக்தர்களும் கூட்டம் கூட்டமாக வந்து கம்பம் சென்ற இடத்தை கண்டு வழிபட்டு சென்றனர். பலரும் காலி பாட்டில்களில் அந்த நீரை பிடித்து எடுத்து சென்றனர். கம்பம் ஆற்றில் விடப்பட்டதும் கண்களை கவரும் வகையில் விதவிதமான வாண வேடிக்கை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Leave a Comment