திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்!


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழாவும் ஒன்று.

அந்தவகையில் இந்தாண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா, கடந்த 19-ம் தேதி தொடங்கி, 10 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன.

மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று, தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்ந்தார்.


அந்தவகையில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீ£பரதனையும், இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடைபெற உள்ளது.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து முருகபெருமானை வழிபட்டார்கள்.



Leave a Comment