பச்சைப் பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்


கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வரவேற்றார் வீர ராகவ பெருமாள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 15-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது.
மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் 25-ந் தேதி பட்டாபிஷேகமும், 26-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடந்தது.
அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நிறைவு பெற்றது.
இந்த நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் ஏப்ரல் 28-ந் தேதி மாலை 6.15 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.
கள்ளழகரை, அழகர் வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் நிரப்பி இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, வர்ணித்து ஆடிப்பாடி எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கே நடந்த எதிர்சேவை நிகழ்ச்சிக்கு பின் அங்கிருந்து வழிநெடுகிலும் அமைக் கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.
அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார்.இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்கூட்டியே வீரராகவப் பெருமாள் வைகைஆற்றுக்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றங்கரைகளில் நேற்று இரவு முதலே பக்தர்கள் குவிந்தனர்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் மீது பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

 



Leave a Comment