ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்


கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் மாசிமக விழாவை முன்னிட்டு நேற்று 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசிமகத்துக்கு பெயர் பெற்ற இக்கோயிலில் கடந்த 20ம் தேதி விழா கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் உற்சவம் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று காலை வெள்ளிப்பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. அலங்கரிக்கப்பட்ட தனித்தனி படிச்சட்டங்களில் நாயன்மார்களின் உற்சவர்கள் இரட்டை வீதியுலாவாக ஆதிகும்பேஸ்வரர், சாரங்கபாணி கோயில் வீதிகளில் உலாவந்தது. அப்போது கோயில் யானை மங்களம் முன்னே செல்ல, திருக்குடந்தை சிவனடியார் பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடி சென்றனர். தொடர்ந்து 63 நாயன்மார்களும், அதன்பின்னர் சுவாமி- அம்பாளும் மங்கள இசைவாத்தியத்தோடு வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பின்னர் நேற்று இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் யானை அம்பாரியில் வீதியுலா நடைபெற்றது. முக்கியவிழாவாக 28ம்தேதி சுவாமி, அம்பாள் தேரோட்டமும், மார்ச் 1ம் தேதி மகாமகம் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற உள்ளது.



Leave a Comment