கார்த்திகை மாதத்தில் செய்ய வேண்டியவை!


 

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இம்மாதத்தில் வீடு முழுவதும் விளக்குகளால் அலங்கரிப்போம். திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பே தமிழ்மக்கள் இறைவனைஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை 'கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிடுகின்றன.பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன.

சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டுகொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர்.

விளக்கு

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.இதன் அடிப்பாகத்தில்பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம்செய்கின்றனர்.

பொட்டு

திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல்குங்குமமும் வைக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துபூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

 

 

கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும்யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.

தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

நேரம்

தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும்.

முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

திசைகள்

தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

எண்ணெய்

கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீபம். நல்லெண்ணை தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது, நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.

 

செல்வம் பெற

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணெய் கொண்டு தீபமேற்ற வேண்டும்.

செல்வங்கள் பெற விரும்புவோர் வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த எண்ணெய் கூடாது

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது.

மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

திரி

விளக்கிற்கு திரியும் மிகவும் முக்கியமானது. சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.

முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது.

வரலாறு

தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் ஒளியாக எழுந்து நின்று ஒளியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும், அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களை பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தத் தொடங்கினர்.

தோல்வி

அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள்.

ஆறு பெண்கள்

சப்த ரிஷிகளின் மனைவிகளின் அழகில் மயங்கிய அக்னிபகவானுக்கு அந்த பெண்கள் மீது அடக்க முடியாத மோகம் உண்டானது. அதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவனது மனைவி சுவாகாதேவி தனது கணவன் முறைத் தவறி நடந்துக் கொண்டால் சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்துபோனாள்.

அதனால் தானே ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு, தன் கணவன் ஆசையை நிறைவேற்றிளாள். ஆனால் வசிட்டரின் மனைவி அருந்ததியைப் போல அவளால் உருமாற முடியவில்லை. எனினும் சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை பெண்கள் என்று பெயர். இப்பெண்கள்தான் முருகனை வளர்த்தார்கள் என்பது ஒரு கதை.

   

முதல் சோதனை

கார்திகை மாதத்தில் ஏற்றப்படும் திருவண்ணாமலை ஜோதி மிகவும் பிரபலமானது. பவுத்த சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆமணக்கு விதையில் இருந்து நெய் எடுக்கலாம் என கண்டுபிடித்தனர்.

இதை ஒரு துணியில் நனைத்து தீ வைத்த போது, பிரகாசமான வெளிச்சம் கொடுத்தது. அந்த காலத்தில் இப்போது இருப்பது போல் லைட் எல்லாம் கிடையாது. இரவில் எங்கு பார்த்தாலும் இருட்டு தான்.

ஏனென்றால் இரவில் விளக்கு ஏற்றும் பழக்கம் அப்போது இல்லை. காய்ந்த மரத்தை வெட்டி தீமூட்டி அந்த வெளிச்சத்தைதான் பயன்படுத்தினர். எனவே இந்த கண்டுபிடிப்பு பற்றி மக்கள் மன்னிடம் கூறினர். முதலில் பயந்த மன்னனுக்கு பின்னர் அந்த நெய்யை சோதித்து பார்க்க ஆர்வம் வந்தது.

 

திருவண்ணாமலை

இதற்காக நகருக்கு பக்கத்தில் இருந்த அண்ணாந்து என்ற குன்றின் உச்சியில் ஒரு பெரிய பள்ளத்தை வெட்டினான். அதில் இந்த ஆமணக்கு நெய்யை அதிகளவில் ஊற்றி், பெரிய திரியை ஏற்றி கொளுத்தினான்.

அந்த வெளிச்சத்தால் எந்த விலங்கிற்கும், மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படவில்லை என்ற நம்பிக்கை பிறந்தது. எனவே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதித்தான்.

அப்படி ஆமணக்கு நெய் சோதிக்கப்பட்ட இடம் அண்ணாந்துமலை என்ற திருவண்ணாமலை .

அர்த்த நாரீஸ்வரர்

கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை.

துளசிதேவி திருமணம்

கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு .

நவக்கிரக தோஷம்

நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.

 



Leave a Comment