குரோதி வருடம்.... துயில் நீங்கி எழும்போது செய்ய வேண்டியது....


சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சித்திரை, தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப்பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். இந்தாண்டு குரோதி வருடம் பிறக்கிறது.

சித்திரை மாதம் தொடங்குவதற்கு முன், இரவு வீட்டில் நிலைக்கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்-காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்துவிடுவார்கள். மறுநாள் காலையில் துயில் நீங்கி எழும்போது, அந்த தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பார்கள். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.

பூஜையறைகளை அலங்கரித்து விளக்கேற்றுவதும், முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், புதுவருட பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்க பலனை கேட்பதும், இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர்மோர் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப்பச்சடி, பருப்பு வடை, பருப்பு பாயாசம், மசால் வடை போன்றவை இடம்பெறுதல் அவசியம்.



Leave a Comment