துலாம் ராசிக்கு மார்ச் மாதம் பணவரத்து திருப்தி தரும்...


துலாம்:

கிரகநிலை:

ராசியில்  சந்திரன் -  சுக  ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சனி -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் ராஹூ  - களத்திர  ஸ்தானத்தில் குரு  -  அயன சயன போக  ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

14-03-2024 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-03-2024 அன்று சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

08-03-2024 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

02-03-2024 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப் பெற்ற துலா ராசி அன்பர்களே, நீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். இந்த மாதம் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்தி தரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள்  தரும்போது கவனமாக இருப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும்.

பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

சித்திரை 3, 4 பாதம்:

இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

சுவாதி:

இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 09, 10

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

 



Leave a Comment