பூனைக்கு கோவிலா!


பூனை குறுக்கே வந்தால், அபசகுனமாக கருதப்படும் நிலையில், கர்நாடக மாநிலம், மாண்டியாவில் உள்ள ஒரு கிராமத்தில், பூனைக்கு கோவில் கட்டி பூஜை செய்யப்படுகிறது.இங்கு, மாண்டியா மாவட்டத்தில், பெக்காலாலே கிராம மக்கள், பூனையை கடவுளாக வழிபடுகின்றனர்.  கன்னடத்தில், 'பெக்கூ' என்பதற்கு, பூனை என, பொருள். அதன்படி, இந்த கிராமத்தின் பெயரும் அமைந்துள்ளது.மாண்டியாவில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ள இந்த கிராமத்தில், பூனையை வழிபடும் வழக்கம், 1,000 ஆண்டுகளுக்கு முன் துவங்கியதாக கூறப்படுகிறது. பெண் கடவுளான, தேவி மங்கம்மா, பூனையின் உருவில் கிராமத்திற்கு வந்ததாகவும், தீய சக்திகளை விரட்டி மக்களை காத்ததாகவும், கிராம மக்கள் நம்புகின்றனர்.


கோவில் பூசாரி கூறியது:  எங்கள் முன்னோர் எதிரே, தேவி மங்கம்மா, பூனை வடிவத்தில் தோன்றி, தன்னுடைய தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தி மறைந்தார். அந்த இடத்தில், ஒரு புற்று தோன்றியது. அதன்பின், பூனை வடிவில், தேவியை வணங்கும் வழக்கம் துவங்கியது. கிராமவாசிகள் யாரும் பூனையை துன்புறுத்தக் கூடாது. மீறினால், அவர்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். பூனை இறந்து கிடப்பதை பார்த்தால், அதை அடக்கம் செய்யாமல் அங்கிருந்து செல்வதில்லை. மேலும், மங்கம்மா தேவிக்கு திருவிழாவும் நடத்தப்படுகிறது.



Leave a Comment