ஐப்பசி மாதம் இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்கும்....


பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முடிவு பெற்று  ஈசுவரன் மற்றும் முருகனுக்கு விசேஷமான ஐப்பசி மாதம் பிறக்கப்போகிறது. இந்த மாதத்தின் சிறப்புகள், கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து இங்கே காணலாம். ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம்.

 துலா ஸ்நானம்:
ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணீய தீர்த்தங்களும் காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவேரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும்.

கோவத்ச துவாதசி:
கோவத்ச துவாதசி அன்று மாலை நேரத்தில் 04-30 மணி முதல் 06-00 மணிக்குள் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து பூஜித்து வழிபட்டால் வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

தனத்திரயோதசி:
திரயோதசி அன்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது சிறப்பு.. இதனால் பொருள் பணம் சேர்க்கை உண்டாகும்..மேலும் தன்வந்திரியை பூஜித்து வழிபட்டால் அனைவரும் நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.

தீபாவளி:
ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம்-தேய்பிறை சதுர்தசி திதி நரக சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளன்று கிருஷ்ணர் நரகாசுரனை கொன்று மக்களை காத்தமைக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும் லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு. மஹாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் சிறக்கும்.

கேதார கௌரி விரதம்:
கேதார கௌரி விரதம் அன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் குழப்பங்கள் பூசல்கள் நீங்கும்.

யமத் துவிதியை:
யமத் துவிதியை அன்று சகோதர சகோதரிகள் ஒன்று கூடி சகோதரியின் வீட்டில் விருந்து உண்டு மன மகிழ்ச்சியுடன் பரிசுகள் பரிமாறிக் கொள்ள வேண்டும்.. இதனால் குடும்பத்தார் அனைவரும் தீர்க்க ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.



Leave a Comment