பிரகதீஸ்வரருக்கு 3,825 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!


கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், கட்டப்பட்டது. உலக புகழ்பெற்ற இக்கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, 75 கிலோ எடை உள்ள, 51 மூட்டை என, 3,825 கிலோ அரிசியால் சாதம் சமைத்து பரகதீஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி காலை, 9 மணி முதல், கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி, மாலை, 6:00 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட, ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது, இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த சாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதம், ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.



Leave a Comment