ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்....


ஆனித் திருமஞ்சனம் மற்றும் ஆனி உத்திர தரிசனத்தை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உற்சவர் ஆனந்த நடராஜருக்கு 40 வகையிலான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிவாய நம... சிவாய நம... சுவாமி தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை டீரங்க் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில்  எழுந்தருளியுள்ள, உற்சவர் சிவகாமி அம்பிகை சமேத ஆனந்த நடராஜ மூர்த்திக்கு ஆண்டுக்கு ஆறு முறை, சித்திரை திருவோண நட்சத்திரம், ஆனி உத்திர நட்சத்திரம், மார்கழி திருவாதிரை நட்சத்திரம், ஆவணி சதுர்த்தி, புரட்டாசி சதுர்த்தி, மாசி சதுர்த்திதி ஆகிய காலங்களில் சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்..

அதன்படி, ஆனி மாத திருமஞ்சனத்தை முன்னிட்டு ஆனி உத்திர சிறப்பு மஹா அபிஷேகத்தை தொடர்ந்து இன்று இரவு கோவிலில் உற்சவர் ஆனந்த நடராஜர் சிவகாமி அம்பிகை சுவாமிகளுக்கு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, இளநீர், பல்வேறு வகையான பழசாறுகள், பூ மலர்கள், சங்க அபிஷேகங்கள் உள்ளிட்ட 40 வகையிலான வாசனை திரவியங்களை கொண்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கியவாறு நடராஜர் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பல்வேறு வகையிலான சோட உபச்சாரங்கள் செய்யப்பட்டு பஞ்சலோக மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது..

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆனித் திருமஞ்சனம் மற்றும் ஆனி உத்திர தரிசன விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாய நம... சிவாய நம... சிவாய நம...என  கரகோஷத்தோடு  வேதமந்திரங்கள் முழங்கியவாறு நடராஜர் சுவாமியை பக்தி பரவசத்தோடு வழிப்பட்டு சென்றனர்.



Leave a Comment