ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


தேனியில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீப ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வராகி அம்மனை தரிசித்தனர்.

தேனி நகரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் 3 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பத்து நாள் நவராத்திரி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வராகி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வருகிறது.

ஆசாட நவராத்திரியின் முக்கிய நாளான இன்று வராகி அம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றன. பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகப் பொருட்கள் கொண்டு வராகி அம்மனுக்கு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பெண்கள் வராகி அம்மனுக்கு வழிபாடு நடத்தி ஆரத்தி எடுத்தனர். பின்னர் வராகி அம்மனுக்கு புஷ்ப மலர்களாலும் வண்ண மலர் மாலைகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பச்சை புடவை உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் வராகி அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆஷாட நவராத்திரி முன்னிட்டு வராகி அம்மனை தரிசித்துச் சென்றனர்.



Leave a Comment