ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் சித்திரை தேர்த் திருவிழா....


ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் சித்திரை தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் பக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். .

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயிலில் வருடம் தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா பத்து நாட்களுக்கு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 6 நாட்களாக ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க பல்லக்கு, புஷ்ப பல்லக்கு, சிம்ம வாகனம்,குதிரை வாகனம், கேடயம் உள்ளிட்டவற்றில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில் ஏழாம் நாளான இன்று ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். முன்னதாக உற்சவமூர்த்திக்கு பால் தயிர் இளநீர் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, சின்ன கடை உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக பக்தி பெருக்குடன் கோவிந்தா என முழக்கமிட்டு இழுத்துச் சென்றனர். வழி நெடுக பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.



Leave a Comment