சபரிமலை மண்டல விரதம்: ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்!


 

கார்த்திகை மாதத்துடன் ஆரம்பமான சபரிமலை மண்டல காலத்தில், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை அணிவது முதல் இருமுட்டி கட்டி பாதயாத்திரை செல்லும் வரை, ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக முறைகள் மற்றும் நெறிகள் பற்றிய முழு தகவல் இங்கே… ச்வாமியே சரணம் ஐயப்பா!

 

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் “சாமியே சரணம் ஐயப்பா” எனும் கோஷங்கள் வீதியெங்கிலும் ஒலிக்கத் தொடங்கும்.

இந்த மாதத்தின் முதல் நாளிலேயே அதிகாலை புனித நீராடி, கோவிலில் அல்லது வீட்டில் வழிபாடு செய்து ஐயப்பனுக்கான மாலை அணிந்து விரதத்தை ஆரம்பிப்பார்கள். பல பக்தர்கள் ஏற்கனவே மாலை அணிந்து விரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக 41 நாட்கள் (மண்டலம்) விரதம் இருப்பார்கள். சிலர் 45 அல்லது 48 நாட்கள் கடைப்பிடிப்பதும் வழக்கம். துளசி அல்லது ருத்ராட்ச மாலை 108 அல்லது 54 மணிகளுடன் அணிய வேண்டும். விரத காலத்தில் நீலம், கருப்பு, காவி, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.

தினமும் காலை, மாலை குளித்து பூஜை செய்ய வேண்டும். கோவிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். படுக்கும் போது பாய், தலையணை போன்றவற்றை தவிர்த்து தரையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், போதைப் பொருள், உல்லாச சுற்றுலா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

முதல் முறையாக மாலை அணியும் கன்னிச் சாமிகள் வீட்டில் பூஜை செய்து, ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்ய வேண்டும். இருமுட்டிக்கட்டு தேங்காயை சன்னிதானத்தில் நெய் அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவது சிறந்தது. பெண்களின் மாதவிடாய் காலத்தில் அவர்களை எந்த விரதச் செயலிலும் ஈடுபடுத்த வேண்டாம்.

கார்த்திகை மாதத்தில் வீடுகளில் தினமும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முடிந்தவரை இருவேளைகளில் விரதம் இருந்து, இரவில் வாழைஇலை சாப்பாடு அருந்தலாம். முடியாதவர்கள் அன்னதானம் செய்வது சிறப்பாகும்.

இந்த முறைகளை பின்பற்றிக், 41 அல்லது 48 நாள் விரதத்தில் ஈடுபட்டால், ஐயப்பனின் அருள் பெற்று வாழ்வு வளம் பெருகும் என நம்பப்படுகிறது. ச்வாமியே சரணம் ஐயப்பா!



Leave a Comment