விருச்சிகம்


சுய கட்டுப்பாட்டுடன் இருக்கும் விருச்சிக ராசியினரே நீங்கள் தந்திரசாலி. நீங்கள் பேசுவதற்கு முன்பு வார்த்தைகளை கோர்த்து பேசுவது நல்லது. திருமணத்திற்கு பிறகு யோகமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். சேமிப்புகளை கரைப்பதில் வல்லவர் நீங்கள்.

 

 

உங்களின் தொழில் ஸ்தானத்திலிருந்து லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் குரு பகவான். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடந்து மன நிம்மதி அடைவீர்கள். அனைத்து விஷயங்களும் படிப்படியாக சீராகும். வருமானம் உயரும். வீண் விரயம் ஏற்படாத வகையில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீர்கள். செய்தொழிலில் நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

 

புதியவர்கள் கூட்டாளிகள் ஆவார்கள். இதனால் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள்.

 

ஆற்றல் மிகுந்தவர்களையும், திறமைசாலிகளையும் உறுதுணையாகக் கொண்டு புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் இல்லம் தேடி விருந்தினர்கள் வருவார்கள். மற்றவர்கள் முடியாது என்று விட்டுவிட்ட காரியங்களைக் கூட நீங்கள் சுலபமாகச் செய்துமுடிப்பீர்கள்.

 

உங்களின் மன பலத்தை மூல தனமாக்கிகொள்வீர்கள். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கும். குடும்பத்தாருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள்.

 

மற்றபடி வெளி ஆட்களிடம் உங்களின் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை விட்டுக்கொடுத்து முடித்துக்கொள்ளவும்.

 

நம்பகமான கூட்டாளிகளிடம் முக்கியமான வேலைகளைப் பிரித்துக் கொடுத்து அவர்களின் விருப்பப்படி செயல்பட அனுமதிப்பீர்கள். அனுபசாலிகளின் வழிகாட்டுதலின்படி குறித்த காலத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களின் காரியங்கள் நேர்த்தியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வீர்கள்.

 

நல்ல நண்பர்களின் ஒத்துழைப்புடன் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பெற்றோர் வழியில் சில மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். உடன் பிறந்தோரால் அனாவசியப் பிரச்னைகள் ஏற்படலாம்.

 

அதனால் அவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அனாவசியமான பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும் பயணங்களின் போது கவனம் தேவை. மற்றபடி பிள்ளைகளுக்கு சிறப்பான வருமானம் தரும் உத்யோகம் கிடைக்கும். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் வாக்குகொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ வேண்டாம்.

 

உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைப்பீர்கள். உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

 

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நல்லபடியாக முடியும். கூட்டாளிகள் உங்களை நம்பிப் புதிய முதலீடுகளில் ஈடுபட சம்மதிப்பார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று உங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இதனால் சக வியாபாரிள் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.

 

அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்களுக்கு கட்சியில் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உட்கட்சிப் பூசல்களில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

 

கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்கு முடித்துக் கொடுத்த பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெற முயற்சிக்கவும். ரசிகர்களின் மனம் புண்படாத வகையில் நடந்துகொள்ளுங்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பார்கள். எனவே  அவர்களின் மனம் குளிர நடந்துகொண்டு அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பு, பாசம்  அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டு உங்கள் செல்வாக்கை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

 

மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதனால் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். மற்றபடி விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு செலுத்தி வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும்.

 

விசாகம்:

இந்த குருப் பெயர்ச்சியால் முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது.

 

அனுஷம்:

இந்த குருப் பெயர்ச்சியால் மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.  தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும்.

 

கேட்டை:

இந்த குருப் பெயர்ச்சியால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம்.

 

 

 

பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம்.  கோளறு பதிகம் பாராயணம் செய்யலாம். செவ்வாய்தோறும் எலுமிச்சைமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். முன்னோர் வழிபாடு தினமும் செய்யவும்.

 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7



Leave a Comment