காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஜம்புலிங்கேஸ்வரர்


பஞ்சபூத தலத்தில் நீர் தலமாக அமைந்துள்ளது ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருச்சி அருகில் திருவானைக்காவல்அமைந்துள்ளது இக்கோயில். பஞ்சபூதங்களில் நீரினை இத்தலம் குறிக்கிறது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இத்தலலிங்கம் அப்பு லிங்கம் என்றழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் உமையம்மை நீரில் சிவலிங்கத்தை வடித்து வழிபாடு நடத்தினாள். யானையும், சிலந்தியும் இத்தல இறைவனை வழிபட்டு முறையே சிவகணத்தலைவனாகவும், கோச்செங்கட் சோழ அரசனாகவும் உயர்நிலை அடைந்தன.
ஜம்பு என்றழைக்கப்படும் வெண்நாவல் மரத்தின் அடியில் இத்தல இறைவன் அருள்புரிந்ததால் இவர் ஜம்புகேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
இங்குள்ள இறைவன் தரைமட்டத்திற்கு கீழே அமையப்பெற்று எப்போதும் நீர் சூழ்ந்தே காணப்படுகிறார். இத்தல இறைவனை உமையம்மை வழிபட்டதால் உச்சி கால வழிபாட்டின்போது அர்ச்சகர் சேலை அணிந்து இங்கு வழிபாடு நடத்துவது சிறப்பம்சமாகும்.
யானை ஏறி செல்ல முடியாத அளவில் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் இத்தலம் முதன்மையானது. சிவனடியார்கள் பலராலும் இத்தலம் பாடப்பெற்றுள்ளது. இத்தலத்தில் அம்மையும் அப்பனும் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர்.



Leave a Comment