தசாபுக்தி தோஷம் நிவர்த்தி செய்யும் வெள்ளீஸ்வரர்!


செங்கல்பட்டு – கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டினத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சுக்கிர பகவானும் சூரிய பகவானும் வழிபட்ட ஈஸ்வரன், மெய்யூர் வெள்ளீஸ்வரர் கோவில். இத்திருக்கோயிலில் மூலவராக வெள்ளீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.மூலவர் சுயம்புவாகத் தோன்றிய லிங்கம். வெள்ளியாகிய சுக்கிரன் இங்கு வந்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் சுக்கிரவனின் அம்சமாக வெள்ளீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.இத்திருத்தலத்தில் வெள்ளீஸ்வரர் சந்நதிக்கு எதிரே அரச ரத்தின் கீழ் ராகுவும் கேதுவும் ஒன்றாக எழுந்தருளியிருக்கிறார்கள். இது மிகவும் விசேஷமானதாகும். தினமும் ராகுகாலத்தில் இங்கு பாலாபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்ட பின், வெள்ளீஸ்வர்ரையும் வணங்கினால் சர்ப தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

இத்திருத்தலத்தில் வெள்ளீஸ்வரர் மூலவராக அருள்பாலிக்கிறார். தொடர்ந்து அவர் சந்நதியில் விநாயகரும், பாலமுருகனும் காட்சியளிக்கிறார்கள். உள் மண்டபக் கூரையில் ராகுவும், கேதுவும், சூரிய சந்திரர்களைக் கவ்வும் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நின்று பூஜை செய்தால், ஜாதகத்தில் உள்ள தசாபுக்தி தோஷம் விலகி, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடுவதாக பக்தர்கள் வணங்குகின்றன. மேலும் அதன் அருகில் பல்லியின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொட்டு வணங்கினால் பல்லி சொல்லால் ஏற்படும் தோஷங்கள் அகலுவதாகக் கருதப்படுகிறது. வெள்ளீஸ்வரர் சந்நதியில் மேற்கூரையில் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது.

சுக்கிரன் வழிபட்ட, சுயம்புவாகத் தோன்றிய வெள்ளீஸ்வரரை பௌர்ணமி தினத்தில் 21 முறை வலம் வந்தால், கிரிவலம் வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கமாண்டல தீர்த்தத்தில் சிவபெருமானை ஆவாஹனம் செய்து, அத்தீர்த்தத்தினால் அடியார்க்கு அருள்பாலித்த கமண்டலசித்தர் என்பவர் இங்கு வாழந்து வந்த்தாக இத்திருதல வரலாறு கூறுகிறது. இத்திருத்தலத்துக்கு பிரதோஷம், பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளாமானோர் வந்து நெய்தீபம் ஏற்றி வைத்து வெள்ளீஸ்வர்ரை வழிபட்டு அருள் பெறுகின்றனர்.



Leave a Comment