திருப்பதி ஏழுமலையான் தங்க கஜ வாகனத்தில் வீதிஉலா


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி பரிநய உற்சவத்தின் முதலாவது நாளான இன்று தங்க கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வைகுண்டத்தில் இருந்து மகா விஷ்ணு சீனிவாச பெருமாளாக கலியுகத்தில் அவதரித்தார். நாராயணவனத்தை ஆட்சி செய்து வந்த ஆகாச ராஜ மன்னர் தனது மகளான பத்மாவதியை சீனிவாச பெருமாளுக்கு திருமணம் செய்து வைத்தார்.சித்திரை மாதம் தசமி அன்று நாராயணவனத்தில் திருமணம் நடைபெற்றதாக வெங்கடாச்சல மகத்தியம் என்ற பூராண நூலில் கூறப்பட்டுள்ளது.
பத்மாவதி, சீனிவாச பெருமாளின் திருமணத்தை நினைவு கூறும் விதமாக திருமணம் நடைபெற்ற முந்தைய நாள் முதல் மூன்று நாட்கள் பத்மாவதி பரிநய உற்சவம் என்ற பெயரில் 1992ம் ஆண்டு முதல் தேவஸ்தானம் சார்பில் திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பத்மாவதி பரிநய உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி பரிநய உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
இதையொட்டி தங்க கஜ வாகனத்தில்மலையப்ப சுவாமியும், ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் தனி பல்லக்கிலும் எழுந்தருளி நான்குமாட வீதியில் ஊர்வலமாக நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டபத்மாவதி பரிநய மண்டபத்தை அடைந்தனர்.அங்கு மலையப்பசுவாமியும், தாயார்களும் எதிர்ரெதிர் திசைகளில் கொலு வைக்கப்பட்டு, மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து, பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, பூ பந்து எறிதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், ஊஞ்சல் உற்சவத்தில் மலையப்ப சுவாமியும், தாயார்களும்எழுந்தருளினர்.
அன்னமய்யா சங்கீர்த்தனைகள் பாடப்பட்டது. இதையடுத்து, மலையப்ப சுவாமியும்,தாயார்களும் பரிநய மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.பரிநய உற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை தங்க குதிரை வாகனத்திலும் 3வது நாளான நாளை மறுநாள் தங்க கருட வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
இதில் செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ, ஜீயர்களும் பக்தர்களும் திரளாக பங்கேற்றனர்.



Leave a Comment