மெய்ப்பொருள் காண்பது அரிது


- "மாரி மைந்தன்" சிவராமன் 

திருமந்திரம் எளிய விளக்க உரை - 4

பதிபல வாயது பண்டிவ் வுலகம்
 
விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்

துதிபல தோத்திரஞ் சொல்ல வல்லாரும்

மதியிலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே

( திருமந்திரம் - கடவுள் வாழ்த்து)

ஆதியிலிருந்தே இறைவனுக்குப்
பல பெயர்களைச் சூட்டி வணங்கி மகிழ்வது நமது வழக்கம்.

தெய்வ வழிபாட்டிற்கு விதிகளாக 
சடங்கு 
சாத்திரம் 
யாகம் 
என பலவும் வகுத்து அவற்றில் 
உழல்வதும் 
நம் மாந்தர் பழக்கம்.

இப்பேதங்களே 
தத்தம் தெய்வம் 
பெரியதென
தர்க்கமாய்
தகராறாய் 
வம்பாய் வேதனையாய் பகையாய்
நீடித்துத் தொடர்வது உலகின் இயல்பானது.

மந்திரங்களும் உபாசனைகளும் தோத்திரங்களும்
பக்திப் பாடல்களும் மெய்யறிவை வளர்க்காது.

எத்தனை காலம் ஆனாலும் 
கிரியை விதிகளால் 'மெய்ப்பொருள் 
ஒன்றே'
என்ற 
உண்மை புரியாது.
உணரவும் முடியாது.

எனவே தான் 
உலக இன்பங்களில் சிக்கி 
அல்லல் படுகின்றனர் அத்தனைபேரும்.

எவ்வளவு படித்திருந்தாலும் மெய்ப்பொருள்
காண முடியாமல் இறைவனை அறியமுடியாமல்  நெஞ்சினுள்ளே  அமைதியின்றி வாடுகின்றனர்.



Leave a Comment