அனைத்துத் தோஷங்களும் போக்கும் வளர்பிறை சதுர்த்தசி, லக்ஷ்மி நரசிம்மர் வழிபாட்டு!


வளர்பிறை சதுர்த்தசி திதியில் விரதமிருந்து லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவது சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தரும். அன்றைய தினம் நரசிம்மரை தரிசனம் செய்தால் அனைத்துத் தோஷங்களும் விலகி விரும்பும் நியாயமான பூரண பலன்கள் கிடைக்கும். நரசிம்மம் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். மிகப்பெரிய ஜ்வாலையானவன் என்று நரசிம்மனைச் சொல்கிறது புராணம்.

நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்து நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். அதிலும், வளர்பிறை சதுர்த்தசி திதி மிகவும் விசேஷமானது. சக்தியும் உக்கிரமும் வாய்ந்தவர் நரசிங்க பெருமாள். பக்தன் பிரகலாதனுக் காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம்.நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

உக்கிர மூர்த்தியாக உக்கிர சொரூபமாகத் திகழ்கிறார் ஸ்ரீநரசிங்கப் பெருமாள். இஷ்ட தெய்வமாக நினைத்து தொடர்ந்து வாரந் தோறும் வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்களையெல்லாம் தங்குதடையின்றி நடத்திக் கொடுத்து அருளுவார் நரசிம்மர்.

இவரை புதன்கிழமை பானக நைவேத்தியம் செய்து வணங்கி வந்தால், எட்டுத் திசைகளி லும் நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகள் அகலும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், நரம் கலந்த சிங்கம் எனப் பல திருநாமங்கள் உண்டு.

சென்னை திருவல்லிக்கேணி கோயிலில் நரசிம்மர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் விசேஷமானவர். இவருக்கு பானக நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால்,விரைவில் நம் வேண்டுதல்களை யெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார்.

லட்சுமி நரசிம்மரை தினமும் வழிபாடு செய்ய வேண்டும். நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும். தினந்தோறும் பூஜை அறையில் லட்சுமி நரசிம்மரை நினைத்து ‘ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.

அம்பாளுடன் இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மரை தாராளமாக, பயப்படாமல் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.நரசிம்மர் வழிபாட்டில் நிவேதனமாக பானகம் இருக்க வேண்டும். அதுதான் சிறப்பான பலனை கைமேல் கொடுக்கும்.

உலர் திராட்சை, ஏலக்காய், கற்கண்டு போன்ற நிவேதனத்தை தாராளமாக நரசிம்மருக்கு வைத்து வழிபாடு செய்யலாம். எந்த வேண்டுதலாக இருந்தாலும் உண்மையோடு, மன உறுதியோடு செய்யும் பட்சத்தில் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பலன் இரட்டிப்பாகும்.



Leave a Comment