குடும்பத்துடன் வந்து குலதெய்வத்தை வழிபட்ட ரோஜா...


காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடலில் உள்ள தனது குல தெய்வ கோவிலான செல்லியம்மன் கோவிலுக்கு குடும்பத்தாருடன் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும்,பிரபல நடிகையுமான ரோஜா வந்திருந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் பூர்வீக வீடு உள்ளது. ஆர்.கே.செல்வமணி அவ்வப்போது இங்கு வந்து செல்வார்.

இந்நிலையில் ஆர்.கே.செல்வமணியின் மனைவி நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைதொடர்ந்து ஆந்திர மாநில அரசு ரோஜாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வழங்கியது.

அமைச்சர் பதவி ஏற்றதை தொடர்ந்து  முதன்முறையாக தனது நேர்த்தி கடனை நிறைவேற்றும் விதமாக உத்திரமேரூர் அருகே உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள தனது குல தெய்வ கோவிலான செல்லியம்மன் கோவிலுக்கு தனது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி,உறவினர்கள் என தனது  குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு அம்மனை நடிகை ரோஜா வழிபட்டார். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானமும் அவர்  வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், அமைச்சர் பதவி ஏற்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு வருவதாக வேண்டி இருந்தேன் அதன் அடிப்படையில் குலதெய்வ கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன் சென்றார். இதனை தொடர்ந்து திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தேன் என தெரிவித்தார்.



Leave a Comment