கடனை அடைக்க, சுபகாரியங்கள் செய்ய சிறந்த ஹோரை எது?


சூரிய ஹோரை

சூரியன் ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விசயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற காரியம் செய்யலாம்.

சுபகாரியங்கள் செய்ய இந்த ஹோரை ஏற்றதல்ல. இந்த ஹோரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம். இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.

சுக்கிர ஹோரை :

சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஹோரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

புதன் ஹோரை :

கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம். இந்த ஹோரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

சந்திர ஹோரை :

வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது. இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது.

வியாபார விஷயமாக பயணம் செய்ய ஏற்றது. இந்த ஹோரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.(கிடைப்பது என்பது மிக மிக அரிது)

சனி ஹோரை :

சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது...

குரு ஹோரை :

எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது. எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. இந்த. ஹோரையில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.

செவ்வாய் ஹோரை :

செவ்வாய் ஹோரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய்.

எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது.இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும். தாமதித்தால் கிடைக்காது.
 
முக்கியமான சில விதிகள். என்னதான் குரு ஓரை யாக இருந்தாலும் வெள்ளிக்கிழமைகளில் வரக்கூடிய குரு ஹோரையை தவிர்த்தல் நல்லது . புதன் ஓரை, லக்னாதிபதியாக இருந்தாலும் செவ்வாய்க் கிழமைகளில் புதன் ஓரை தவிர்த்தல் நலம் .

சனி செவ்வாய் ஓரைகளில் கணவன் மனைவி பிரச்சனை ஏற்படின் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நலம் இல்லை எனில் பிரச்சனை பெரிதாகி விடும் . ஹோரை பார்த்து நடப்பவர்க்கு,தோல்விகளும் பிரச்சனைகளும் வராமல் தவிர்க்க இயலும்.

 

 



Leave a Comment