நாராயணா என்ற திருநாமத்தின் பெருமை


 

அண்ட சராசரத்தில் உலவிக்கொண்டு, சதா சர்வ காலமும் நாராயணா என்று கூறிக்கொண்டிருந்த நாரதருக்கு திடீரென்று ஒரு சந்தேகம். இப்படி மூச்சுக்கு முந்நூறு தடவை நாராயணா என்று சொல்கிறோமே , அப்படி என்றால் என்ன?. கேள்வி மண்டையை குடைய ,ஒரு முனிவரிடம் கேட்டார். “நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?”

 அதற்கு முனிவர் தனக்கு தெரிந்த அளவில்,“ரொம்ப சுலபம்…”நாரம்’ என்றால் “தண்ணீர்’. “அயனன்’ என்றால் “சயனித்திருப்பவன்’. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார்.ஆனால் நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. அதனால் நாராயணனிடமே ஓடினார்.

“ஐயனே! உம்மை நான் நாராயணா…நாராயணா என்று சதாசர்வகாலமும் துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம் சொல்லுமே!”என்று நாரதர் குறும்பாக கேட்க, நாராயணனும் “அடடா…எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக்கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்”என்றார் .  இது போதாதா நாரதருக்கு,வண்டிடம் ஓடினார்.

“வண்டே! நாராயணன் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியுமா?” என்ற கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே வண்டு விழுந்து இறந்து போனது.

நாரதர் நாராயணனிடம் திரும்பினார். “நாராயணன் என்ற நாமம் கேட்பவர்கள் இறந்து விடுவார்கள் என்று தானே அர்த்தம்,” என்றார்.

“அப்படியா , எதற்கும் அதோ! அந்தக் கிளியிடம் கேள்,” என்று ஒரு மரத்தை நோக்கி கைநீட்டினார் பகவான்.

கிளியிடம் இதே கேள்வியை நாரதர் கேட்க, கிளி சுருண்டு விழுந்து இறந்து போனது. நாரதர் பயந்து போய்  விட்டார். மூச்சுக்கு முன்னூறு தடவை “நாராயணா’ என்கிறோமே! நாமும் செத்து விடுவோமா!” பயத்துடன் நாராயணனிடம் வந்தார்.

“பெருமாளே! அதற்கு அர்த்தம் ‘அது’தான்…உறுதியாகி விட்டது.

“நாரதா! அவையெல்லாம் விதி முடிந்து இறந்து விட்டது . எதற்கும் அந்த பசுவின் கன்றிடம் போய் கேள்” என்றார்.  “அய்யோ ... இதை நான் போய் கேட்க, அந்த கன்று இறந்து போக, பசுக்கன்றை கொன்ற கொடியபாவம் என்னை அணுக வேண்டுமா முடியாது” என்றார் நாரதர்.

“அப்படி ஏதும் ஆகாது. தைரியமாக போ ”என்று உசுப்பிவிட்டார் பெருமாள். நாரதரும் சற்று தைரியத்துடன் கன்றிடம் போய் கேட்க, கன்றின் கதை முடிந்தது.

“நாராயணா! எல்லாம் போச்சு! பசுக்கன்றைக் கொன்ற கொடிய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விட்டாய்! வருகிறேன்!” எனக் கிளம்பியவரை, பெருமாள் தடுத்தார்.

“நாரதா! கலங்காதே! இதுவரை நீ கேட்டது பூச்சி, பறவை, விலங்குகளிடம்! இனி காசி இளவரசனிடம் போய் கேள், அவன் மனிதனாயிற்றே! அவனுக்கு ஏதும் ஆகாது!” என்ற நாராயணனை,”அய்யா! என்னை அரசதண்டனைக்கு ஆளாக்க எத்தனை நாள் திட்டம் போட்டு வைத்திருந்தீர்! முடியாதைய்யா! முடியாது” என்ற நாரதரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

நாரதர் பயந்தபடியே இளவரசனிடம் கேட்டார். அவனுக்கு ஏதும் ஆகவில்லை. அவன் அழகாகப் பதில் சொன்னான். “நாரதரே! வண்டாய், கிளியாய், கன்றாய் உம் முன் காட்சி தந்தது நானே! உம் வாயால் “நாராயணா’ என்ற நாமத்தை திரும்பத் திரும்பக் கேட்டு உயர்ந்த மனிதப்பிறவி. அதிலும் செல்வங்களையெல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய் பிறந்திருக்கிறேன். தொடர்ந்து நாராயண மந்திரத்தை பக்தியுடன் ஓதி வைகுண்டம் செல்வேன்!” என்றான்.

இப்போது தான் நாரதருக்கு புரிந்தது.“ஆகா! “நாராயணன்’ என்றால் “வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்’, “வாழ்வுக்குப் பின் பிறவிப்பணி தீர்ப்பவன்’ என்றல்லவா அர்த்தம் என இறைவனை மனதார  துதித்தார்.

ஓம் நமோ நாராயணா .....



Leave a Comment