இரவில் வந்த இறைவன்


- "மாரி மைந்தன்" சிவராமன்

அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வரலாறு 

இளையான்குடி  மாற நாயனார் (பாகம்-1)

இளையான்குடி 
என்ற சிற்றூரில் 
ஆவணி மாதம் 
மக நட்சத்திரத்தில் அவதரித்தவர் 
சிவ அர்ப்பணிப்பில் சிறந்தோங்கியவர் 
என்று
சிவனடியார்கள் 
போற்றும் 
இளையான்குடி
மாற நாயனார்.

சோழநாட்டில் திருநள்ளாறு அருகே இருக்கும் இளையான்குடி. தொண்ட நாட்டிலுள்ள இளையான்குடி.
இன்றைய 
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் 
இளையான்குடி என மாறனார் அவதரித்த இளையான்குடி பற்றி 
பல முரண்கள் உண்டு.

ஆன்மிகத்தில் 
உச்சம் தொட்ட சிவநேசர்கள், 
மாற நாயனார்
உழவு செய்யும் 
வேளாளர் குடும்பத்தில் பிறந்து
வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்வு நிலை
குலைந்த போதும் சிவனடியார் 
மனம் குளிர 
பணிந்து உபசரித்து 
இறை போற்றிட
முக்தி அடைந்த திருத்தலம் என இளையான்குடியைப் போற்றுகின்றனர்.

மாற நாயனார் நாயன்மார்களுக்கு எல்லாம் வழிகாட்டி 
என புகழ்ந்து வணங்குகின்றனர் சைவம் போற்றுவோர்.

முழுமையும் கலந்த அன்பு. முழுமையும் நிறைந்த 
சிவ சிந்தனை.
தேடி வந்தோரை ஓடிச்சென்று
உபசரிக்கும் மாண்பு. இவையே மாற நாயனார்.

அவர் 
நாடி வருபவர் 
எந்த வர்ணத்தவர் 
என்று பார்ப்பதில்லை. 
அருள்வல்லான்
அனுப்பிவைக்கும் 
நல்லடியார் என்றே 
கருதி வணங்குவார்.

முதலில் 
சிவனடியாருக்கு 
அஞ்சலி செய்து 
இன் புகழ்பாடி 
பாத அபிஷேகம் செய்து ஆசனத்தில் இருத்தி 
சைவ ஆகமப்படி அர்ச்சித்து 
விருந்து படைப்பார்.

எப்படிப்பட்ட 
விருந்து தெரியுமா ?

கசப்பு
புளிப்பு 
இனிப்பு 
துவர்ப்பு 
கார்ப்பு 
உவர்ப்பு 
கொண்ட 
அறுசுவை உணவு.

அதுவும் 
நான்கு வகைகள்.

சிலதைப் பருகலாம்.
சிலதை நக்கலாம்
சிலதை உண்ணலாம்.
சிலதைத் தின்னலாம்.

இவற்றையே 
பருகல்,  நக்கல் 
உண்ணல், தின்னல்
என்கிறது தமிழ் மரபு.

சுவைகளில் 
ஆறு சுவையாய் 'ஆறானவன்'
சிவபெருமான் 
என்கிறது சைவ மரபு.

பொதுவாக மகேஸ்வரனுக்குப் படைப்பதைப் போல் சிவனடியாருக்குப்
பரிமாறுவதை
மகேஸ்வர பூஜை 
என்பர்
சிவனடி வணங்குவோர்.

இளையான்குடியில் பெரும் நிலச்சுவான்தார் இளையான்குடி 
மாற நாயனார்.

'குபேரன்' என்றே 
ஊரே சொல்லி வியக்கும்.
வணங்கும்.

ஊரெங்கும் 
அவர் பற்றிய 
பேச்சும் புகழும் 
செல்வமும் செல்வாக்கும் இப்படி நேர்மறையாக இருக்க 
அவருடன் 
எதிர்மறையாக விளையாட 
ஆர்வம் கொண்டார்
அருள் வள்ளல் நாதர்.

'செல்வம் 
இருப்பதால் தான் 
மாற நாயனார்
வாரி வழங்குகிறார். செல்வம் இழந்து வறுமையில் வீழ்ந்தால்  
அவர் என்ன செய்வார் ?'
என ஊரில் 
பேச்சு இருந்தது.

அதுவே
ஆதி நாதனின்
எண்ணத்திலும்
எழுந்து
ஒரு விடை தரும்
திருவிளையாட்டாய் ரூபமெடுத்தது. 

'தன்னிடம் இருந்த அத்தனை செல்வமும் அஞ்செழுத்தானுக்கே உரியது' என 
வாழ்ந்து வந்த
மாறநாயனார் வாழ்வில் வீழ்ச்சி தொடங்கியது.

வருமானம் குறைந்தது.
நிலங்களை விற்று சிவனடியார்களுக்கு முன்பு போலவே 
மனம் நிறைய 
உணவு தந்தார்.

கடைமுடிநாதர் கணக்குப்படி
காலப்போக்கில் 
வறியவர் ஆனார்
மாற நாயனார்.

அப்போதும் 
குணம் மாறாமல்
கடன் வாங்கி 
இறை கடன் நிறைத்தார்.

கடைசியில்
எஞ்சியிருந்தது 
ஒரு சிறு 
விவசாய நிலமே.

அவருக்கும் 
அன்பும் பண்பும் 
ஒருங்கே கொண்ட 
அவர் மனைவி 
புனிதவதிக்கும் கூட போதாத சாகுபடிதான்.

ஓரிடத்தில் 
கூலி வேலைக்குப் போனார் 
கூத்தபிரான் திட்டப்படி.

ஆனால் செல்வம் முற்றிலும் 
நீங்கிய பிறகும் 
மாற நாயனார் 
அறம் நீங்காது 
மனம் தளராது 
வீடு தேடி வரும் சிவனடியார்களை உபசரித்தே வந்தார்.

ஒருநாள் இரவு.

மழை பொசு பொசுவென தூறிக்கொண்டிருந்தது.

எங்கோ இடியும்
கண் எதிரே மின்னலும்
பயமுறுத்திக் கொண்டிருந்தது.

வீட்டுத் திண்ணையில் இருந்த 
மாற நாயனாருக்கு 
பசி உயிரை வாங்கியது. நம்பி வந்த 
மனையாள்... பாவம்
அன்று அவளும்
முழு நாள் பட்டினி.

'சாகுபடியும் தேறாது...  இருவரையும்
சாகும்படி 
அம்மையப்பன் 
திட்டமிட்டு விட்டானோ' என எண்ணியவாறு வீட்டை 
உள்பக்கம் 
தாளிட்டு விட்டு 
உறங்கப் போனார்
மாற நாயனார்.

அப்போது 
லேசாகக் கதவு 
தட்டும் ஓசை.

திடுக்கிட்டு எழுந்த 
நாயனார் 
கதவைத் திறந்தார்.

கதவு தட்டியவர்
ஒரு சிவனடியார்.

அவர் மற்றையோர் 
போல் இல்லை. 
முகம் பிரகாசமாக இருந்தது.
ஒருவித 
திருநீறு மணம் 
வீடு முழுதும் நுழைந்து நறுமணம் பரப்பியது.

சிவனடியார் வடிவில்
விளையாடல் புரிய வந்தவர் 
கைலாசபதி அல்லவா !

கைலாயமும் பூலோகமும் கண்டிராத பேரொளி வீட்டை நிறைத்தது. 

ஆனால் கண்கள் 
பூஞ்சை அடைந்து 
நாசிகள் உணர்விழந்திருந்த 
மாற நாயனாருக்கும் 
அவர் மனைவிக்கும் ஒளியும் வாசமும் எதுவும் புலப்படவில்லை. 

அவர்கள் கவலை உண்மையில்
வேறாக இருந்தது.

இந்த இருட்டில்
வந்தவருக்கு 
எப்படி 
விருந்து படைப்பது !?

சிவனடியாரின்
புன்னகைக்கு 
வணக்கம் சொல்லி
துண்டு கொடுத்து மழையில் நனைந்த 
தலையையும் 
உடம்பையும் 
துவட்டிக் கொள்ளச் செய்து  விழுந்து வணங்கி
அவ்விருட்டு நேரத்திலும்
புகழ் ஓதி 
ஓர் இடத்தில் 
அமரச் செய்தார்
அறம் நழுவா 
மாறன் நாயனார்.

"கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள் சுவாமி...! உங்களுக்கு அமுது தயாராகிவிடும்" என்றார் விருந்தோம்பல் மிக்க 
இளையான்குடியார்.

நடத்திக் கொண்டிருக்கும் நாடகத்தின் நாயகனும் ஒன்றும் அறியாதவர் போல் 'சரி... சரி'
என தலையாட்டி விட்டு சுவர் ஓரமாய் 
இருந்த திட்டில் 
படுத்துக் கொண்டார்.

கண்கள் மூடி உறங்குபவர்போல் நடித்தாலும் 
ஞானக் கண்ணனுக்கு நடப்பதும் 
நடக்க போவதும் 
தெரியும் தானே !

வீட்டினுள் சமையலறையில் 
மாற நாயனாருக்கும் மங்கை நல்லாருக்கும் கவலை நிறைந்த 
பேச்சு தொடங்கியது.

மனைவி புனிதவதி அறிவாற்றலில் சிறந்தவள். ஆலோசனை சொல்வதில் வல்லவள்.

"என்ன செய்யலாம் ?"
என்று கணவன் 
கை பிசைந்து
துடிதுடித்த போது "மெதுவாகப் பேசுங்கள்... சுவாமிகள் தூக்கம் கலைந்து விட போகிறது.." என கணவனின் வாய்பொத்தி
ஒரு மௌனத்திற்குப் பிறகு கூறலானாள்.

"இந்த இரவில் 
நாம் யாரைக் கேட்பது ?நமக்கு இனி யாரும் 
கடன் தர மாட்டார்கள்.
இந்த நேரத்தில் 
அரிசியும் தந்துதவ மாட்டார்கள். 
எந்த உதவியும் கிட்டாது.

ஒன்று செய்யலாம்.

இன்று காலை 
நமது நிலத்தில் 
விதைத்த விதைநெல்லை
எடுத்து வந்து சமாளிக்கலாம்...."

ஆலோசனை 
சொன்ன கையோடு நெல்மணிகளை
எடுத்துவர 
ஒரு கூடையைத் தந்தாள் மாற நாயனாரின் மனமறிந்த மணவாட்டி.

மழை பொழியும் கும்மிருட்டில் தூரத்திலிருந்த 
தன் நிலம் 
நோக்கி நடந்தார்
இளையான்குடியார்,
மழைத் தூறலைச்
சமாளிப்பதற்காக 
கூடையைத் தலைமேல் கவிழ்த்தபடி.

ஒரு பெரும் மின்னல்
வெளிச்சம் விட்டது.

கண்முன்னே 
இரு பாம்புகள் 
பிணைந்து விளையாட வரப்பு மறைவில்
கீரி ஒன்று
இரண்டில் 
ஒன்றையாவது இரையாக்கக் காத்திருந்தது 
அவர் கண்ணில்பட்டது.

மாறனார் 
பாம்புகளுக்கெல்லாம் பயந்த மாதிரி தெரியவில்லை.

இறை தேடுவோருக்கு கீரியின் இரையா முக்கியம்?
எம்பி எழும்
பாம்புகளின் 
விஷமம்  
விஷமா என்ன ?!

நிலத்திற்குச் சென்றார். 
அன்றைய 
பெரு மழையால் அதிர்ஷ்டவசமாக
விதை நெல்மணிகள்
தேங்கிய மழை நீரில் மிதந்து கொண்டிருக்க கைகளில் துளாவி  நெல்மணிகளை நேரத்தியாகச் சேர்த்துக் கூடையிலிட்டார்,
சோர்வடையாச் சிவபக்தர்.

கூடை நிரம்பியது 
சேற்றுமண் கப்பிய
நெல்மணிகளால்.

யோசனையோடு 
திரும்பும் வழியில் ஓரத்தில் விளைந்திருந்த கீரைகளையும் 
ஓரிரு காய்களையும் பறித்துக்கொண்டார் 
கறி சமைக்க.

வீட்டுக்கு வந்தார்.
மனைவி எதிர்பார்த்தபடி வாசலிலேயே காத்திருந்தாள்.

"அம்மா....
 இதோ கொண்டு வந்துவிட்டேன்.

பாவம் சுவாமி.
ரொம்ப களைத்து கண்ணயர்ந்துள்ளார்.

இனி உன் வேலைதான். சமையலைத் தொடங்கு. சுவாமிகளுக்கு படைப்போம்.
விரைந்து செய்.
மீதமிருப்பின்
நம் பசியும் தீர்ப்போம் "

மைத்துனர் ஸ்ரீரங்கநாதரை போல் ஏகாந்தமாய்ப் படுத்திருந்த 
ஆதி நாதர் 
லேசாய் கண்விழித்து கண் சுருக்கி
மென்னகைத்தார்.

சமையலறைக்குள் 
சென்ற பிறகுதான்
உறைத்தது புனிதவதிக்கு.

'உணவு தயாரிக்க
பொருட்கள் தயார்.
 தீ மூட்ட 
விறகு வேண்டுமே ?'

கணவனைக் 
கண்ணீரோடு அழைத்தாள்.


(இளையான்குடி மாறநாயனார் புராணம்- தொடரும்)



Leave a Comment