திருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவு வாயிலில் புதிய தங்க தகடுகள் பதிக்கும் பணி தொடக்கம் 


திருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடம் 3.13 கோடி ரூபாயில் புதிய தங்க தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ராஜகோபுரம் நுழைவாயில் கொடிமரம் பலிபீடம் ஆகியவற்றுக்கு பொருத்தப்பட்டுள்ள தங்கத் தகடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டதால் அவை பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே அதனை மாற்றி புதிய தங்க தகடுகள் பதிக்க அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இதற்காக  6.625 கிலோ தங்கத்தால் 3.13 கோடியில் தங்க தகடுகள் பதிக்க அறங்காவலர் குழு கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. 68 கிலோ செம்புடன் சேர்த்து தயார் செய்யப்படும் இந்த பணிகள் 2 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் முதல் பல மன்னர்கள், சிற்றரசர்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 

1958 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலவர் குடியிருக்கும் கருவறைக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம் தங்க தகடுகள் பாதிக்கப்பட்டது. இதற்காக 12 டன் செம்பு, 120 கிலோ தங்கம் பயன்படுத்தி தயார்  செய்து பதிக்கப்பட்டது. 2007 ஆண்டு மணி மண்டபம், கோயிலில் உள் 16 கதவுகளுக்கு தங்கதகடுகள் பதிக்கப்பட்டது. 2013 ஆண்டு மீதமுள்ள 18  கதவுகளுக்கு தங்க தகடுகள் பதிக்கப்பட்டது. தற்பொழுது ராஜகோபுரம்  நுழைவுவாயில், பலிபீடம், தங்க கொடி மரம் ஆகியவை புதிய தங்க தகடுகளால் பதிக்கப்பட உள்ளது. 

இதன் மூலம் ஏழுமலையான் கோவில் நுழைவு வாயிலான ராஜகோபுரத்தில் இருந்து ஏழுமலையானை தரிசனம் செய்யும் மணிமண்டபம் வரை தங்க தகடுகளால் பக்தர்களுக்கு காட்சி அளிக்கப்பட உள்ளது.



Leave a Comment