அமாவாசைக்கு  அப்படி என்ன தான் விசேஷம் ?


மகத்துவம் மிக்க நம் இந்து மதத்தில் , அமாவாசை , பௌர்ணமி . அஷ்டமி ,நவமி மற்றும் சதுர்த்தி திதிகளுக்கென்று ஒரு முக்கியத்துவம் உண்டு . எந்த ஒரு  நல்ல வேலையை  செய்வதற்கும்   இவைகளை அனுசரித்தே  நாள்  குறிக்கப்படும் .  

அமாவாசையை பற்றி நமக்கு தெரிந்து தெரியாததுமான சில தகவல்களை இப்பதிவில் காண்போம் .  அமாவாசை முன்னோர்களுக்கு  தர்ப்பணம் கொடுக்கும் நாளாக  காலம் காலமாக நம் மனதில் ஆழ பதிந்து விட்டதால் , சிலர் அன்று சுபகாரியங்களை தவிர்த்து விடுவார்கள் . ஆனால் அதே சமயம்  நிறைந்த  முழு அமாவாசை தினத்தன்று , கடை திறப்பது ,  புதிய வண்டி வாங்குவது , நிலம் பத்திரம் செய்வது போன்ற வேலைகளை செய்பவர்களும் உண்டு . இப்படி நம் நல்லது கெட்டதில் முக்கிய பங்கு வகிக்கும் அமாவாசைக்கு  அப்படி என்ன தான் விசேஷம் ?

அமாவாசை தினத்தில் தான் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது . அன்று  புண்ணியலோகத்திலிருந்து நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து ,தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து அவர்களை , கரிசனத்தோடு ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள். நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும்  என்பது நம்பிக்கை .

 அதிலும் தை , ஆடி , புரட்டாசி,மாசி அமாவாசைகள்  மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது .அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது .  மேலும் அமாவாசை தினத்தன்று  ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசை நாளில் தான்  நடத்துகின்றனா்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது என்று பெரியவர்கள்  சொல்லக் கேட்டு இருப்போம் . புண்ணியத் தலங்களின் அருகில் உள்ள  கடலில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிப்பதான் மூலம்  வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது .  
 



Leave a Comment