துன்பம் போக்கும் பட்டீஸ்வரம்  துர்க்கை அம்மன்


ஆதிபராசக்தியாய் அனைத்தும் கைவரச் செய்பவள் தான் துர்கை அம்மன்.  பட்டீஸ்வரத்தில் உள்ள  துர்க்கை அம்மனை வழிபட்டால் துன்பங்கள் அனைத்து நீங்கும் என்பது ஐதீகம். 

முன்னொரு காலத்தில் பார்வதி தேவி, ஞானம் பெறுவதற்காக சிவனை நோக்கித் தவம் இயற்றத் தொடங்கினாள். காமதேனுவின் நான்கு மகள்களில் முதல் மகளான பட்டி, உதவிகள் புரிவதற்காக இங்கு வந்து உதித்தாள்.

களிமண்ணில் அழகான சிவலிங்கத்தை உருவாக்கினாள் பட்டி. பின்னர் தனது கொம்புகளினால் மண்ணைத் தோண்டி குளம் அமைத்தாள். ஈசனுக்கு பார்வதி அபிஷேகம் செய்ய ஏதுவாக புனித நதிகளான கங்கையையும், காவிரியையும் தனது ஆத்ம பலத்தால் இக்குளத்துக்கு வரவழைத்தாள்.

தானே பால் சுரந்து பாலாபிஷேகத்துக்கும் வழி வகுத்தாள் பட்டி. இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பட்டீஸ்வரன் என்ற பெயர் ஏற்று இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினான். அதுமுதல் பட்டீஸ்வரம் என்றே இவ்வூருக்குப் பெயர். இவ்வூரில்தான் துர்க்கை அருள்பாலித்து வருகிறாள்.

ஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் ரோஜா மாலை அணிந்து காட்சி அளிக்கிறாள் . மூன்று கண்களைக் கொண்டவள். எட்டுக் கரங்களுடன், எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்து, நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். எட்டு கரங்களில் ஒன்றை அபயஹஸ்தமாகவும், மற்றொன்றை இடை மீது வைத்து கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறாள்.

பிற ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு சாந்தமாக போர் முடித்த கோலத்தில் காணக் கிடைக்கிறாள். இடப்பக்கம் நோக்கியுள்ள வாகன சிம்மத்தின் ரூபிணியாக விளங்குகிறாள். துர்க்கை இங்கு சாந்த சொரூபிணியாக இருப்பதை அவளது புன்னகை தவழும் முகமும், வலப்புறம் திரும்பியுள்ள சிம்ம வாகன முகமும் நிரூபிக்கிறது. பக்தர்களை வரவேற்கும் கோலத்தில் வெற்றி வாகை சூடிய நிலையில் இருக்கிறாள்.



Leave a Comment