குழந்தை பாக்கியம்- தெளிவான ஆன்மீக விளக்கம்


குழந்தை பாக்கியம்- தெளிவான ஆன்மீக விளக்கம்
குழந்தை பாக்கியம் என்பது திருமணத்திற்கு பின்பு ஒவ்வொரு குடும்பத்திலும்.மிக மிக ஆவலோடு எதிர் நோக்கும் சுப நிகழ்வாகும். எத்தனையோ  வகையான பேறுகளில் இது மிகவும் முக்கியமானது. வம்ச விருத்தி, வாரிசுயோகம் என்று சொல்லப்படுகிறது. இந்த பாக்கியம் முதல் வருடத்திலேயே  சிலருக்கு அமைகிறது. ஒரு சிலருக்கு 2,3 ஆண்டுகள் கழிந்து குழந்தை பேறு கிடைக்கிறது. மேலும் சிலருக்கு 6,7 ஆண்டுகள் அதற்கு மேலும்  தாமதமாக கர்ப்பம் உண்டாகிறது. பலருக்கு ஒரு குழந்தை அது ஆணோ, பெண்ணோ ஒன்றுடன் நின்று விடுகிறது. இப்படி இந்த கர்ப்பம் தரிக்கும்  விஷயம் கணவர், மனைவி இருவரின் உடற் கூறுப்படி அமைகிறது. இந்த உடல் கூறு ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்பின்படி இயக்கப்படுகிறது.  இந்த விஷயத்திற்கு நிறை, குறைகளை இருவரின் ஜாதகத்திலும் பார்ப்பது முக்கியமாகும்.
கர்ப்பம் உண்டாகி அடிக்கடி கருச்சிதைவு, கருகலைதல் போன்றவை ஆண், பெண் இருவரின் ஜாதக அமைப்பு, அந்தக் கால நேரத்தில் நடைபெறும்  சாதகமில்லாத தசாபுக்திகள், கோச்சார கிரக அமைப்புக்களே காரணமாகும். புத்திர தோஷம் பல வகைகளில் உண்டாகும். புத்திர தோஷம் எந்த  அளவில் உள்ளது ராசியில் மட்டும் உள்ளதா, நவாம்சத்திலும் உள்ளதா என்று பார்ப்பது அவசியம்.
 ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது 7 பொருத்தம், 9  பொருத்தம் என்று வெறும் நட்சத்திரப் பொருத்தம் மற்றும் அதில் சொல்லப்பட்டுள்ள மகேந்திர பொருத்தம் எல்லாம் இருந்தாலும் அஸ்திவாரம்  அடிப்படை என்று சொல்லக் கூடிய ஜாதக கட்டத்தில் புத்திர யோகம் இருந்தால் தான் ஆணோ, பெண்ணோ பிறக்கும்.புத்திர ஸ்தானமான ஐந்தாம்  இடம், புத்திர ஸ்தானாதிபதி, புத்திர காரகன் குரு போன்ற விஷயங்கள் ஆண்கள் ஜாதகத்தில் பலமாக அமைய வேண்டும். மேலும் சுக்கிரன் பலமாக  இருந்தால் தான் சம்போகத்தில் நிறைவு உண்டாகும். 
சுக்கிரன் நீசம், தீய கிரகங்களில் சேர்க்கை பெற்றால் விந்து குறைபாடு காரணமாக குழந்தை பாக்கியம் அமைவதில் தாமதம் வரும். அதே போல்  ஜாதக கட்டத்தில் திட தைரிய வீரிய ஸ்தானமான மூன்றாம் இடம் நல்ல பலமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். வீரிய சக்தி குறைபாடு  காரணமாக கருத்தரிப்பதில். பிரச்னைகள், தடைகள் வரும். புத்திர காரகன் குரு, புத்திர ஸ்தானாதிபதி எந்த கிரகமோ. இந்த இருவரும் புதன், சனி  வீடுகளான மிதுனம், கன்னி, மகரம், கும்பம் இந்த ராசிகளில் இருக்கக் கூடாது.
 இந்த அமைப்பு ஒரு வகையில் புத்திர பாக்கிய தடையை ஏற்படுத்தும்.  காரகனும்,தனாதிபதியும், புதன், சனி மனைசென்றிட புத்திர சூன்யம் என்று சித்தர் பாடல் தெரிவிக்கிறது. அதற்கு காரணம். இயற்கையிலேயே நபும்சம்,  அதாவது அலி கிரகங்களாக புதன், சனி இருப்பதுதான் . புதன் பெண் அலி, சனி ஆண் அலி என சாஸ்திரம் கூறுகிறது.
பொதுவாக பல கிரகங்களில் பலம், பங்களிப்பு மூலம் தான் எல்லா யோகங்களும் உண்டாகிறது. அந்த வகையில் புத்திர பாக்கியமும் உள்ளது.  பெண்கள் ஜாதகத்தில் சுகஸ்தானம் என்று சொல்லப்படும் லக்னத்திற்கு நான்காம் இடம் மிக முக்கிய அம்சமாகும். இந்த இடம் வயிறு சம்மந்தமாக  தெரிவிக்கும் இடம். வயிறு என்பது பல விஷயங்களை உள்ளடக்கிறது அதில் முக்கியமானது கர்ப்பப்பை இந்த ஸ்தானம் பாதிக்கப்படும் போது தான்  மாதவிடாய்க் கோளாறுகள், கரு முட்டை வளர்ச்சி பாதிப்பு, சுக்கில சுரோணிதம் சரியாக சேராமல் இருப்பது. அடிக்கடி கருச்சிதைவு (அபார்ஷன்)  உண்டாகிறது. நான்காம் இடத்தில் நீச கிரகம் இருப்பது. ராகு, கேது, 6,8,12 ஆம் அதிபதிகள் இருப்பது பார்ப்பது.சனி பார்ப்பது போன்ற அமைப்புக்களால்  கருத்தரிப்பதில் பிரச்னைகள் உண்டாகிறது.
வலிமை, செயல் திறன், ஆற்றல், வீரியம் மிக்க கிரகம் அங்காரகன் எனப்படும் செவ்வாய் ஆகும். ரத்த ஓட்டம், வெப்பம், வீரியம், காம இச்சை,  ஊக்கம், மாதவிடாய் சுழற்சி, உறவில் உணர்ச்சியை தூண்டக் கூடியவர். ஆகையால் தான் தோஷம் என்ற பெயரில் செவ்வாய் தோஷம் உள்ள  ஜாதகத்தை சமதோஷமுள்ள ஜாதகத்துடன் சேர்க்கிறோம். சகோதரகாரகன் என்ற அமைப்பு உடையவர். இவர் பலமாக இருந்தால் தான் சகோதர  உறவுகள் அமையும். செவ்வாய் ஆண் குழந்தை வாரிசை தரும் வல்லமை உடையவர். கர்மபுத்திர அமைப்பு என்று சொல்வார்கள். செவ்வாய் நல்ல  யோக அமைப்பில் லக்னம், நான்கு, ஐந்து, பத்தாம் இடங்களில் இருந்தாலும் பார்வை, பரிவர்த்தனை தொடர்புகள் இருந்தாலும். நிச்சயம் ஆண் வாரிசை  தருவார்.
 கர்ப்பம் அடைவதற்கு எத்தனையோ விஷயங்கள் இயற்கையிலேயே நமக்கு ஒத்துழைக்க வேண்டும். கர்ப்பம் உண்டானவுடன் எல்லா கிரகங்களும்  அதனதன் பங்களிப்பை. அந்த சிசுவின் கர்மாப்படி ஏற்படுத்துகின்றன. இந்த பிண்ட ரகசியத்தை சப்த ரிஷிகள், சித்தர்கள், திருமூலர் திருமந்திரம்  போன்ற நாடி சுவடிகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.ஆண், பெண் சேர்க்கையில் ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் சரியான  நேரத்தில் கலக்கும் போது சுக்கில, சுரோணிதம் இணையும் காலம் கர்ப்பம் உண்டாகிறது. இந்த நிகழ்வு முழுமைக்கும். சுக்கிரன் தான் காரணகர்த்தா.  
அதே நேரத்தில் லக்கினாதிபதி எந்த கிரகமோ அந்த கிரகத்தின் ஆளுமை ஏற்பட்டுவிடும். ஆக கர்ப்பம் ஏற்பட்டவுடன் அந்த குழந்தை எந்த  லக்கினத்தில் பிறக்க வேண்டும் என்பது கருவிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.
இரண்டாம் மாதம் கருவலுப் பெறுவதற்கு செவ்வாய் காரணமாகிறார்.மூன்றாம் மாதம் கருநன்குவளர குரு காரணமாகிறார்.நான்காம் மாதம் எலும்பு,  மஜ்ஜை, நரம்பு போன்றவற்றிற்கு சூரியன் காரணம்.ஐந்தாம் மாதம் தோல், நிறம், ராசி அமைப்புக்கு சந்திரன் காரணமாகிறார்.ஆறாம் மாதம் பிண்ட  நிலை மாறி உருவம் வளர்ச்சியடைந்து முடிவளரும் பருவத்தில் சனி ஆதிக்கம் செலுத்துகிறார்.ஏழாம் மாதம் குழந்தை உதைப்பது, அசைவது, உணர்வு,  நினைவு போன்றவற்றிற்கு புதன் அதிபதியாகிறார்.எட்டு, ஒன்பது, பத்தாம் மாதம், இந்த காலங்களில் எந்த நேரத்தில் பிரசவம், உண்டாகக் கூடிய சூழல்  ஏற்படும். இந்த நிகழ்வுக்கு லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியவர் காரணமாக இருக்கிறார்கள்.
 இப்படி எல்லா கிரகங்களின் பங்களிப்பில் தான்  குழந்தை ஜனனமாகிறது.ராகு, கேது இருவரும் நிழல் கிரகங்களாக எந்த கிரகத்தின் சாரம், அமைப்பை பெறுகிறார்களோ அதற்கேற்ப பலன்கள்  அமையும்.லக்னம், ராசி, நான்காம் இடம், ஏழாம் இடம் ஆகியவற்றுடன் சம்பந்தப்படும் போது கொடி சுற்றி பிறப்பது, மாலை போட்டு பிறப்பது, பிரசவ  சிக்கல்கள், சிசேரியன் போன்றவை ஏற்படுகிறது. ஆகையால் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று  ஜோதிடரிடம் கேட்காமல் ஜாதக பலம், கிரகபலம், ஸ்தானபலம், தசாபலம் இன்றும் ஸ்தூல சூட்சும பொருத்தங்கள் எப்படி உள்ளது என்பதை தெரிந்து  அந்த ஜாதகங்களை சேர்ப்பது உத்தமம்.



Leave a Comment