பார்வை கோளாறை போக்கும் மூன்றாம் பிறை  சந்திர தரிசனம்....!


பஞ்சாங்கப்படி நாளை பங்குனி மாத சந்திர தரிசன நாள். இந்த நாளில் மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். 

ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் அதாவது கோதூளி லக்ன காலத்தில் தோன்றும் பிறையாகும்.

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

பார்வை தரும் பங்குனி பிறை:

ஜோதிடத்தில் இரண்டாம் பாவம் வலது கண்ணையும் பன்னிரெண்டாம் பாவம் இடது கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். மேலும் சூரியனை வலது கண்னிற்க்கு காரகராகவும் சந்திரனை இடது கண்ணிற்க்கு காரகராகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷத்தை லக்கினமாக கொண்ட கால புருஷ ராசிக்கு பன்னிரெண்டாம் இடமான மீனத்தில் சந்திர பகவான் நின்று மூன்றாம் பிறை பார்க்கும் போது பார்வை கோளாறுகள் நீங்கும். முக்கியமாக இடது கண்ணில் பார்வை கோளாறு உள்ளவர்கள் இன்று சந்திர தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
 



Leave a Comment