திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்.... 


ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருடந்தோறும் தை தெப்ப திருவிழா தை மாதம் 10 நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு முருகன் தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு முருகன் தெய்வானை முன்னிலையில் காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

விழாவினை முன்னிட்டு தினமும் முருகன் தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், பூத வாகனம் ,அன்ன வாகனம் ,சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 3 ஆம் தேதி தெப்ப முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.  தொடர்ந்து முருகன் தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை  தெப்பம் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலையில் முருகன் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் 11 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளுவார்.

அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் சுற்றிவந்து முருகன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

இதேபோல இரவு 7 மணி அளவில் மின்னொளியில் தெப்பம் சுற்றுதல் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசிப்பார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.



Leave a Comment