ஆயிரம் பலன் தரும் அபூர்வ அரசமரம்


அரச மரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அரச மரத்தின் அடிப்பக்கம் பிரம்மா, நடுமரம் விஷ்ணு, கிளைகள் கொண்ட மேற்பாகம் சிவன் என்பர். இம்மரம் மகாவிஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியது. எனவே இந்த மரத்தை எக்காரணத்தைக் கொண்டும் வெட்டுவதும், அதன்மேல் ஏறுவதும், கிளைகளை ஒடிப்பதும் தகாத செயல்கள் ஆகும். அரச மரத்திற்கு "அஸ்வத்தா' என்ற பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால்,"வழிபடுபவர்களின் பாவத்தை மறு நாளே தீர்ப்பது' என்று பொருள்.

இந்த அரச மரத்தை திங்கட்கிழமையில் வரும் அமாவாசையன்று விரதம் கடைப்பிடித்து வழிபட்டால் வாழ்வில் வசந்த ராகம் பாடும்; வளமான வாழ்வு கிட்டும். காலை வேளையில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் நூற்றியெட்டு முறை வலம்வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும். மழலைச்செல்வம் கேட்க அரசமர வழிபாடு போல் வேறு எதுவும் இல்லை.

அரசமர நிழல்படுகின்ற நீர்நிலைகளில் வியாழக்கிழமை அன்றும் அமாவாசை அன்றும் நீராடுவது திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்குச் சமம்.

சோமவார அமாவாசை என்றாலே நம்முன் அரசமரம் தோன்றும். இந்த நன்நாளில் அரசமரத்தை 108 பிரதக்ஷணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரதக்ஷண முடிவில் ஒரு பழமோ இனிப்போ சமர்ப்பிக்க வேண்டும். பிறகு பூஜை முடிந்தவுடன் தூப தீபம் காட்டி பூஜை செய்து வைத்தவருக்கும் நம்மால் முடிந்தவரை தக்ஷிணை கொடுக்க வேண்டும். இதுபோல் சோமவார அமாவாசை விரதம் மூன்றாண்டுகளாவது செய்ய கைமேல் பலன் கிடைக்கும். பித்ருக்களை வழிபட்டு அவர்கள் ஆசி பெற சோமவார அமாவாசை மிகச்சிறந்த ஒரு நாள். வடநாட்டில் அரசமரத்தை வெள்ளை நூலினல் 108 சுற்று சுற்றி வருவார்கள்

"ஆயுர்விருத்தி பகவத் தஸ்யவர்த்தந தேஸர்வ ஸம்பத்' என்று பத்ம புராணம்சொல்கிறது. அரச மரத்தைப் பார்த்ததும் வணங்கியவருக்கு ஆயுள் வளரும்; செல்வ வளம் பெருகும். கோவில்களில் உள்ள அரச மரத்திற்கு இன்னும் அதிகமான சக்தி உண்டு. இந்த அரச மரத்தடியில் விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பார். அத்துடன் நாகர் சிலைகளும் அங்கு இருக்கும். இதனால் இது தோஷ நிவர்த்தி மரமாகவும் கருதப்படுகிறது.

அரச மரத்தை காலை வேளையில் ஏழு மணிக்கு முன் வலம் வருவது சிறப்பு. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் மரத்தைத் தொடக்கூடாது.சனிக்கிழமையன்று அரச மரத்தடியில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

அரச மரத்தைச் சுற்றும்போது கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே வலம் வந்தால் கூடுதல் பலன் கிட்டும்.

"மூலதோ ப்ரும்மரூபாய

மத்யதோ விஷ்ணு ரூபிணே

அக்ரத் சிவரூபாய

வ்ருக்ஷ ராஜாயதே நம!'

இம்மரத்திலிருந்து 30 மீட்டருக்குள் எந்த ஒரு கோவில் இருந்தாலும், அந்தக் கோவிலில் மனஅமைதி இருக்கும். மனஅமைதி கொடுப்பதிலும் ரத்த ஓட்டத்தைச்சீர்செய்வதிலும் அரசமரம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. புத்தருக்கு ஞானம்பிறந்த போதி மரம், அரசமரம்தான்.

விஞ்ஞான ஆய்வின்படி ஒரு அரசமரம் நாளொன்றுக்கு 1800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுகிறது. அரசமர சமித்துகளை மந்திரப்பூர்வமாக ஹோமத் தீயிலிட்டு, அந்த ஹோமப் புகை வீட்டில் பரவினால் கண்களுக்குத் தெரியாத பூச்சிகள், கிருமிகள் அழிந்துவிடும்.

இப்படி ஆயிரக்கணக்கான பலன்களை அள்ளித்தரும் அரச மரத்தை உரிய முறையில் தொடர்ந்து வழிபட்டு வந்தால், குழந்தைச் செல்வம் உள்ளிட்ட பல பாக்கியங்களையும் பெற்று நீடுழி வாழ்வர்.



Leave a Comment