திருப்பதி கும்பாபிஷேகம் செல்வோர் கவனத்திற்கு


திருப்பதி கோயில் கும்பாபிஷேகத்தின் போது இலவச தரிசனத்தில் செல்வோர் சாமியை தரிசிக்கலாம் என்று திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயி லில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்‌ஷணம் வரும் ஆகஸ்ட் 12 முதல் 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வரும் 11-ம் தேதி அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனால், 10-ம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்படுவார்கள் என்றும் அதன் பிறகு 17-ம் தேதி காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் அறிவித்தது. இதற்கு பக்தர்கள், பல்வேறு பீடாதிபதிகள், மடாதிபதிகள், இந்து அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த 1994, 2006-ல் நடைபெற்ற சம்ப்ரோக்‌ ஷணத்தின் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது போல, இம்முறையும் குறைந்த அளவிலா வது பக்தர்களை அனுமதிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். தரிசனத் துக்கு அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில், அறங்காவலர் குழு கூட்டம் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச தரிசனத்தில் செல்வோர் சாமியை தரிசிக்க அனுமதிக்கலாம் என்று திருப்பதி கோயில் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது.

ஆக.11 முதல் 16 வரை கும்பாபிஷேக நாட்களில் வைகுண்டம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விஐபி தரிசனம், ரூ.300 தரிசனம், மலைப்பாதை தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment