சிலிர்க்க வைக்கும் ஏழுமலையான் ரகசியங்கள்


திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும்’ அனைத்து மாநில பக்தர்களையும் தன்பால் இழுக்கும் அபூர்வ சக்தி வாய்ந்தது திருப்பதி ஏழுமலையான் கோயில். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்கு தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவைகளை அறியும்போது நம்மை சிலிர்க்க வைக்கிறது. இதில் சிலா தோரணம் என்று அழைக்கப்படும் பாறைகளால் ஆன தோரண வாயில் 250 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதும், ஏழுமலையானின் சிலையும் ஒரே விதமானவை.

இத்தகைய ஏழுமலையான் திருவுருவத்துக்கு பச்சை கற்பூரத்தால் திருநாமம் இடப்படுகிறது. இக்கற்பூரம் தொடர்ந்து பூசப்படும் பாறை வெடித்து விடும். ஆனால், ஏழுமலையானுக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் சார்த்தப்பட்டும் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் எந்த சிலையிலும் சிற்பியின் உளிபட்ட அடையாளம் இருக்கும். ஆனால், ஏழுமலையான் சிலையில் அப்படி எந்த அடையாளமும் இல்லை. மேலும் ஏழுமலையான் திருமேனியில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பளபளப்புடன் இயற்கையாய் அமைந்துள்ளன. ஏழுமலையான் மூலவர் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. 3000 அடி உயரத்தில் குளிர்ந்த சீதோஷ்ணத்தில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்து முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.

பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளை கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாக கொதிக்கின்றன. இக்கோயிலின் வழிபாட்டு முறைகள், உண்டியல் வசூல், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் வியப்பூட்டுபவை. மேலும் இந்த கோயிலின் மடப்பள்ளி மிக பெரியதாகும். அதேபோல் மூலவருக்கான உடை 21 முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு அதை அணிவிப்பதற்கு 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும்தான் மேல்சாத்து வஸ்திரம் எனப்படும் இந்த வஸ்திரத்தை அணிவிப்பார்கள்.

அதேபோல் உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் அணிவிக்க சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் அணிவிக்க 10 ஆண்டுகள் பக்தர்கள் காத்திருக்க வேண்டும். இதுதவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இருமுறை சாத்தப்படுகிறது. அத்துடன் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு கட்டணம் செலுத்தி விட்டு 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். மூலவரின் அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு, பாரீசில் வாசனை திரவியங்கள் வரவழைக்கப்பட்டு, தங்க தாம்பாளத்தில் சந்தனத்துடன் கலந்து, 51 வட்டில் பாலாபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரியுடன் சேர்த்து புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை அபிஷேகம் நடைபெறுகிறது.

அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. அலங்காரத்துக்காக ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ரோஜா மலர்கள் பக்தர்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் சீனாவிலிருந்து சீன சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போண்ற வாசனை பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்துமுறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ‘வேங்கடமெனப்பெற்ற’ என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை காட்டப்படும். பிறகு தென்கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணை பறிக்கும் அழகோடு இருப்பார்.

சுவாமி புஷ்கரணி

திருமலையில் ஆயிரக்கணக்கான புனித தீர்த்தங்கள் இருந்தாலும், வராக புஷ்கரணி என்ற சுவாமி புஷ்கரணி, தும்புரு, குமாரதாரா, சுப்பிரமணியா, பசுபுதாரா, கபில தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் பக்தர்கள் அணுகக்கூடியவையாக உள்ளன. இதில் சுவாமி புஷ்கரணியில் ஏழுலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் கலக்கிறது. ஆகவே இது மிக புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

வெறுங்கை வேடன்

எந்த தெய்வத்தின் சிலையிலும் கையில் ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவ சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் சங்க இலக்கியங்களில் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். அதேபோல் திருப்பதி கோயில் ஓவியங்களும் 300 ஆண்டுகள் பழமையானவை. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.

வாடாத ஆண்டாள் மாலை

திருவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த மாலைகள் அதுவரை புதிய மாலைகளாகவே இருப்பது வியப்புக்குரியது.

அரியும், சிவமும் ஒன்று

ஏழுமலையானை சிவனாகவும், பிரம்மவாகவும், சக்தியாகவும் கருதி அன்னமய்யா, அருணகிரிநாதர் உட்பட பலரும் வழிபட்டுள்ளனர். அதற்கேற்ப அரியும், சிவனும் ஒன்று என்பதை விளக்க வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு பயன்படுத்தப்படுகிறது. மார்கழி மாத அர்ச்சனைக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று நடைபெறும் ஷேத்ர பாலிகா உற்சவத்தில், உற்சவ மூர்த்திக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை அணிவிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது.

ஏழுமலையான் நகைகள்

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ₹1,000 கோடி, இவருடைய நகைகள் வைத்துக்கொள்ள இடமும் இல்லை, அணிவிப்பதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டுக்கு ஒருமுறை உபரி நகைகள் ஏலம் விடப்படுகிறது. ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை. சூரிய கடாரி 5 கிலோ எடை, பாதக் கவசம் 375 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றை கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ₹100 கோடி. தொண்டைமான் தொடங்கி ராசேந்திர சோழன், கிருஷ்ணதேவராயர், அச்சுததேவராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். மூலவர் ஏழுமலையானை போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய வெள்ளி விக்கிரகம் கி.பி 966ம் ஆண்டு செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்திவிடங்கனின் அரசி காடவன் பெருந்தேவி நகைகளை தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் ஏற்படுத்தியுள்ளார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கை செலுத்தியுள்ளார்.

ஆங்கிலேய பக்தர்கள்

கி.பி 1781ம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33வது பிரிவை சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுலையானை வேண்டி குணமடைந்ததும் ஒரு இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார். ஆங்கிலேயர்கள் சர் தாமஸ்மன்றோ, கலெக்டர் ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள். திருமலையின் புனிதம் கருதி கி.பி 1759 முதல் கி.பி 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கில பாதிரியார்கள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவையை நிறுவ விரும்பினர். ஆனால் அதற்கு ஆங்கிலேய ஆட்சி அனுமதிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள்.

பொங்கல், தயிர்சாதம், புளி சாதம், சித்ரான்னம், வடை, முருக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயாசம், தோசை, ரவா கேசரி, பாதாம்கேசரி, முந்திரிபருப்பு கேசரி போன்ற பிரசாதங்கள் தயார் செய்யப்படுகின்றன. ஆனால், தினமும் ஒரு புதிய மண் சட்டியில் வைக்கப்பட்ட தயிர் சாதம் மட்டுமே கர்ப்பக்கிரக குலசேகரப்படியை தாண்டி செல்கிறது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண் சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்கு கிடைக்க பெற்றால், அது மிகப்பெரிய பாக்கியமாகும்.



Leave a Comment