பில்லி, சூனியம் பயம் போக?


தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சார்ந்தவர் வடுகநாதர். இவருடைய மனைவி பொன்னம்மாள். இவர்கள் இருவரும் மணமுடிந்து 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், மதுரை மீனாட்சி அம்மனை மனமுருக வழிபடச் சென்றனர். அப்போது ஒருவர், ‘‘வைகையில் தம்பதியர் சமேதராக நீராடி வந்து அம்பாள் மீனாட்சியையும், அப்பன் சொக்கனையும் வணங்கி செல்லுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறும்’’ என்றார். அதனை தெய்வ வாக்காக கருதி வைகை ஆற்றில் நீராட இருவரும் சென்றனர். அங்கே குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த இடத்தில் அழகான ஓர் ஆண் குழந்தையைக் கண்டனர். அந்த குழந்தையை கையிலெடுத்து வாரி அணைத்துக்கொண்டாள் பொன்னம்மாள். அக்குழந்தையைக் கடவுள் தந்த பரிசாகவே கருதி, குழந்தையுடன் அன்னை மீனாட்சியையும், சொக்கநாதரையும் வழிபட்டு விட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். தும்பைச் செடிகளின் அருகே கண்டு எடுத்ததால் அந்த குழந்தைக்கு ‘தும்பையப்பர்’என்று பெயர் சூட்டினர். அதுவே பையப்பர் என்றாகி ஐயப்பர் என மருவியது. ஏழு வயது நிரம்பியதும் தும்பையப்பரை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி கோயில் திருவிழாவுக்குச் சென்றனர். விழாக்கூட்டத்தில் குழந்தையைத் தவறவிட்டனர். எங்கு தேடியும் காணவில்லை.

அழுது புலம்பி தவித்தனர். ஏமாற்றத்தோடு ஊருக்குத் திரும்பினர். மதுரையில் தன் தாய்-தந்தையரைத் தேடித்தேடி ஓய்ந்து போன தும்பையப்பர், அங்கு மளிகைக் கடை ஒன்றில் பணியாளராக சேர்ந்தார். பெற்றோர், மீனாட்சி-சொக்கநாதர் பெருமைகளைப் பலவாறாகக் கூறியிருந்ததால், தினமும் கடை திறக்குமுன், கோயிலுக்கு சென்று மீனாட்சி அம்மனை வணங்கி செல்வார். ஒருநாள் அம்பாள் சந்நதியில் செந்நிற பட்டுகட்டி, செந்தூர திலகமிட்டிருந்த ஒரு பெண்மணி நின்றிருந்தாள். அவள், தும்பையப்பரிடம், ‘குழந்தாய், கோயிலுக்கு தினமும் வந்து செல்கிறாயே, என்ன வேண்டுதல் உனக்கு, இந்த சின்ன வயதில்?’ என்று வினவ, தும்பையப்பர், ‘‘தாயே, என் பெற்றோரிடம் நான் மீண்டும் சேரவேண்டும்,’’ என்று கூறி அழுதார். ‘‘அழாதே, மீனாட்சி அம்மனைத் தொடர்ந்து வணங்கி வா,’’ என்றாள் அந்தப் பெண்மணி. இப்படி பல நாட்கள் தும்பையப்பரிடம் பேசி வந்தாள் அந்தப் பெண்மணி. அடுத்த ஆண்டு கோயிலுக்கு வந்த பெற்றோரை, தும்பையப்பர் நேரில் கண்டார். அவர்களும் அவரைக் கண்டு பேரானந்தம் கொண்டனர். குழந்தையைக் கட்டித்தழுவி கண்ணீர் பெருக்கினர்.

பெற்றோருடன் ஊருக்குச் செல்லும் முன், தும்பையப்பர் அம்பாள் சந்நதி முன்னே வந்து, அங்கிருந்த அதுவரை தனக்கு ஆறுதலளித்தப் பெண்மணியிடம், ‘‘அம்மையே, எங்க அம்மா, அப்பாவ, நான் கண்டுவிட்டேன்,’’ என்று கண்களில் நீர் பெருக நன்றியுணர்வுடன் கூறி வணங்கினார். ‘‘அப்படியா, ரொம்ப சந்தோஷம்!’’ என்று பதில் கூறிய, அப்பெண்மணி தான்தான் மீனாட்சியம்மை என்பதை அவருக்குக் குறிப்பாக உணர்த்தினாள். பின்னர் ஒரு கண்ணாடியையும், எலுமிச்சைக்கனி ஒன்றையும் அவரிடம் கொடுத்து “தும்பையப்பா, கண்ணாடியை பூஜைஅறையில் வை. அதற்குமேல் இந்த எலுமிச்சைக்கனியை வை. கனி அழுகி என்றைக்கு கண்ணாடியில் முகம் தெரியாமல் போகிறதோ அன்று என்னிடம் வா,’’ என்று சொல்லி விடை கொடுத்தாள். பெற்றோருடன் ஊர் வந்த தும்பையப்பர், பூஜையில் ஈடுபட்டார். ஒருநாள் எலுமிச்சைக் கனி அழுகி இருப்பதைக் கண்டார். கண்ணாடியில் முகமும் தெரியவில்லை. உடனே, அன்னையைக் காண மதுரையை நோக்கி சென்றார். அப்போது கோயிலில் யாகம் நடந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்மணியைத் தேடி, ‘அம்மா, அம்மா...’ என்று அழைக்க, எந்த பதிலும் வரவில்லை. பெண்மணியைக் காணாத துயரத்தில் தும்பையப்பர் பளிச்சென்று அந்த யாகத்தீயினுள் பாய்ந்து விட்டார். உடனே அந்தப் பெண்மணி அங்கே தோன்ற, யாக குண்டத்துள்ளிருந்து அனல் வடு எதுவும் இல்லாமல் தும்பையப்பர் வெளியே வந்தார். அவருடைய பக்தியை கண்டு மகிழ்ந்து, அவர் செவியில் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தாள் அன்னை. பின்னர் ‘‘இந்த லோகத்தில், குறிப்பாகத் தென்னாட்டில் மாய சக்திகளும், மாந்திரீக சக்திகளும் மேலோங்கி வருகின்றன. மாந்திரீகத்தால் தெய்வசக்தியை அடக்க ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது. அவர்களிடமிருந்து மக்களை காப்பாயாக. அதற்காகத்தான் நீ இந்த மண்ணில் தோன்றியிருக்கிறாய். என்னை பூஜை செய், நான் துணை இருப்பேன். தென்திசையை நோக்கிச் செல். எங்கே ஒரு நீர்நிலையில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துகிறதோ அவ்விடமே நீ தங்கி இருக்க ஏற்ற இடமாகும்,’’ என்று கூறி வாழ்த்தி அனுப்பினாள்.

அன்னையின் வாக்கை சிரமேற்கொண்டு தென்திசை நோக்கி தும்பையப்பர் புறப்பட்டார். உவரிக்கு வந்து, அங்கு குடிகொண்டுள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசனம் செய்து விட்டு செட்டியாபத்து கிராமத்துக்கு வந்தார். அங்கிருந்த ஒரு நீர்நிலையில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துவதைக் கண்டார். அன்னையின் ஆணைப்படி தான் தங்கியிருக்க இதுவே சரியான இடம் என்று முடிவு செய்து அங்கே யோகநிலையில் அமர்ந்தார். அம்மனுக்கு கோயில் எழுப்பி, பூஜை செய்து வந்தார். நாளடைவில் அங்கு வசித்த வைணவர் ஒருவரின் கனவில் தோன்றி, ‘நான் பூஜித்து வந்த அம்பாளுக்கு தினமும் நீ பூஜை செய்து வா, அதோடு என்னையும் கவனி, உன் நிலத்துக்கும், குலத்துக்கும் காவலாய் இருப்பேன்’ என்றார். அந்த வைணவர் அம்பாளுக்கும், தும்பையப்பருக்கும் கோயில் எழுப்பினார். முதன்முதலில் உருவாக்கும் சாமி என்பதாலும், கனவில் பெரிய உருவமாக வந்ததாலும் அவருக்கு பெரியசாமி என்று பெயரிட்டார்.

அம்பாளை பெரிய பிராட்டி என்றழைத்தார். அடுத்தடுத்து கோயிலில் வயணப் பெருமாள், அனந்தம்மாள், காவல்தெய்வமான ஆத்திசாமி என சந்நதிகள் உருவாயின. இதனால் இக்கோயில் 5 வீட்டு சாமி என்று அழைக்கப்பட்டது. பிறகு, திருப்புளியாழ்வார், ஆஞ்சநேயருக்கும் சந்நதிகள் அமைக்கப்பட்டன. இப்படி பல சந்நதிகள் இருந்தாலும் ஐந்து வீட்டு சாமி என்றுதான் இப்போதும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. பெரியசாமி சங்கு, சக்கரம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னைகளுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சுகபிரசவம் வேண்டுவோர் பெரியபிராட்டி அம்மையாருக்கு வளையல்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். காலில் உபாதை உள்ளவர்கள் ஆத்திசாமி கோயிலுக்கு நேர்ச்சையாக செருப்பு, கதாயுதம் என காணிக்கை செலுத்துகிறார்கள். பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததன் அடையாளமாக, மறுவருடம் ஆத்திசாமியின் கால் தடங்கள் அந்த செருப்பில் பதிந்திருப்பதைக் காணலாம்!

கிரக தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் பெரியசாமி, ஆத்திசாமி, பெரியபிராட்டி சந்நதிகளில் முட்டைகளை தம் தலையை சுற்றி காணிக்கை செலுத்துகிறார்கள். ஒரு சிலர் கோழி குஞ்சுகளை அப்படி அர்ப்பணிக்கிறார்கள். வடக்கு வாசல் வழியே கோயிலின் உள்ளே நுழைந்தால் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அடுத்து பெரியசாமி தரிசனம். அவரருகே பெரிய பிராட்டி. திருப்புளி ஆழ்வார், ஆத்தியப்பன்சாமி, குதிரை வீரன், வயணப் பெருமாள், அனந்தம்மாள் ஆகியோர் அருள் வழங்குகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18ம் தேதி துவங்கி 6 நாட்கள் சித்திரை திருவிழாவும் (இறுதி நாளன்று வழங்கப்படும் அன்னமுத்திரை என்ற பிரசாதம் மகிமை வாய்ந்தது), தை மாதம் 5ம்தேதி துவங்கி மூன்று நாட்கள் தைத்திருவிழாவும் விமர்சையாக நடக்கும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் விசேஷ பூஜைகள் உண்டு. இக்கோயிலில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண்கள் தொட்டு வணங்கிய பிறகே, பூஜைக்குரிய சாமான்கள் ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.



Leave a Comment