மகரம் - தமிழ் புத்தாண்டு ராசிபலன்


வாக்கு வன்மை அதிகரிக்கும்:
உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்


கல்விமான் என்று பலராலும் பாரட்டப்படும் அளவுக்கு உங்களிடம் சிறப்பான அறிவாற்றல் மட்டுமல்லாமல், கற்பனைத் திறனும் அபரிமிதமாக அமைந்திருக்கும். இளம் வயதில் எப்படியிருப்பினும் உங்கள் அயராத உழைப்பால் நாளும் படிப்படியாக முன்னேறி வாழ்வில் ஓர் உயர்வான உன்னத நிலையை எட்டிப்பிடித்துச் சாதனையாளராகத் திகழ்வீர்கள். மலை குலைந்தாலும் நிலை குலையாத மன உறுதி கொண்டவர்களாக இருந்து எதையும் எதிர்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருப்பீர்கள்.

ஓரளவு பிடிவாதகுணம் என்ற உங்கள் பலவீனத்தைக் கைவிட்டீர்களானால், உங்களுக்கு எதிரிகளே இல்லை என்னும் அளவுக்கு எல்லோரையும் உங்கள் வசம் ஈர்த்துக் கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர்கள் நீங்கள். எதிரிகளைச் சமயம் பார்த்திருந்து கவிழ்த்து விடுவதிலும் தயங்க மாட்டீர்கள். ஜோதிடம், வாஸ்து போன்றவற்றிலும் எழுத்துத் துறையிலும் சிறந்த ஞானஸ்தர்களாக விளங்குவீர்கள்.

இந்த ஆண்டில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் உயர்வைக்கண்டு ஆச்சரியப்படுவார்கள். கொக்குக்கு ஒன்றே மதி என்கிற ரீதியில் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணப்படுவீர்கள். வருமானம் சீராக வந்து கொண்டிருந்தாலும் சில விரயங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

அதோடு பிள்ளைகளின் நலனுக்காகவும் சிறிது செலவு செய்ய நேரிடும். சமூகத்தில் உங்கள் பெயர் கௌரவம் கூடும். இழப்புகளை ஈடு செய்யும் அளவுக்கு புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வந்து கொண்டிருக்கும். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப உங்கள் செயல் திட்டங்களை மாற்றி அமைத்து வெற்றி பெறுவீர்கள்.

அதே சமயம் கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சரியான வெளிச்சம் உள்ள இடத்திலமர்ந்து படித்து கண்களில் குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனம் புண்படும்படி பேசியவர்கள் வருத்தம் தெரிவித்து நட்பாவார்கள். இல்லத்தில் சிறப்பான வாழ்க்கைச்சூழல் உண்டாகும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று குதூகலமாக காலத்தைக் கழிப்பீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். புது வீடு, வாகனம் ஆகியவைகளை வாங்குவீர்கள்.

 உத்தியோகஸ்தர்களுக்கு:
உங்கள் நீண்டகால விருப்பங்களெல்லாம் எளிதாகக் கிடைக்கப் பெற்று உடலும் உள்ளமும் உற்சாகமடைவீர்கள். உய்டர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்குமாதலால் மறைமுக வருமானங்கள் போன்ற தனிப்பட்ட சலுகைகள் உங்கள் பொருளாதார நிலையைப் பெருமளவில் உயர்த்தி விடும். வேலை தேடி அலைந்து வந்த சிலர் இப்போது நல்லதொரு வேலையில் அமர்ந்து விடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். சுபநிகழ்ச்சிகள் இனிதாக நிறைவேற சூழ்நிலை சாதகமாக அமையும். யூனியன் லீடர் போன்ற கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கும் பெரும் முன்னேற்றங்கள் உண்டாகும். சேமிப்புகளும் பெருகுவதால் வீடு, மனை, வாகன வசதிகளைப் பெற்று மகிழ்வீர்கள்.

வியாபாரிகளுக்கு:
நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகி வருவதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கும், திருப்திகரமான லாபமும் உண்டாகும். பொருளாதார நிலையில் உண்டாகும் முன்னேற்றத்தின் காரணமாக சேமிப்புகளிலும் அசையா சொத்துகளிலும் முதலீடு செய்வீர்கள். வண்டி, வாகன வசதிகளையும் அமைத்துக் கொள்வீர்கள். தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதிலும், வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதிலும் உங்கள் நேரடி கவனத்தைச் செலுத்துவது நல்லது. அதிகமான அளவில் எந்தப் பொருளையும் இருப்பு வைக்காமல் இருப்பது விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க உதவும். புதிய கிளைகள் தொடங்கி வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து கொடுக்கச் சிலர் முனையக்கூடும். வாடிக்கையாளர்களிடம் சிக்கல் எதுவும் ஏற்படாத அளவுக்கு பக்குவமாக நடந்து கொள்வது அவசியம்.

கலைத்துறையினருக்கு:
புதிய புதிய வாய்ப்புகள் பெருமளவில் தேடி வரும். வாய்ப்பு தேடி நீங்கள் பெருமளவில் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும். அதற்கேற்ற முறையில் உங்கள் தகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. சோர்வின்றி உழைத்து உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துங்கள். இதனால் அனைவரின் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்கள் பெருமையும் உயரும். எல்லாரிடமும் சுமூகமாகப் பழகி வருவதும் அவசியம். சிலர் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் வழங்கும் விருதுகளுக்குத் தேர்வு பெறுவீர்கள். வீடு, வண்டி, வாகன வசதிகளை அமைத்துக்கொண்டு குடும்பத்தில் அனைவரின் மகிழ்ச்சிக்கும் வழிவகுப்பீர்கள்.

மாணவர்களுக்கு:
கல்வித்துறையில் சாதனை படைத்தவர்களாகச் சிறப்பிடம் பெற்று விளங்குவீர்கள். அரசு மற்றும் பொது சமூகநல அமைப்புகள் வழங்கும் கல்விச் சலுகைகள் உங்களுக்குக் கிடைத்து பெருமையும் புகழும் அடைவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்று மகிழ்வீர்கள். அறிவியல், மருத்துவம் போன்ற துறையில் பயில்வோர் கூடுதல் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உயர்கல்வி பெற வெளிநாடுகளுக்குச் செல்லும் விருப்பம் நிறைவேறி மகிழவும் சிலருக்கு வாய்ப்புண்டு. சிலர் படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை வாய்ப்பைப் பெறக்கூடிய நிலையையும் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு:
உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும் உங்கள் தன்னலமற்ற பணிகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்குச் சிறப்பான பதவிகளை அளிக்கத் தலைமை முன்வரக்கூடும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதித்துப் போற்றிப் பாராட்டுவார்கள். பொருளாதார வசதி நல்ல முறையில் மேம்படும் என்ற காரணத்தால் வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவைகளைப் பெற்று மகிழ்வீர்கள். பொது மக்களிடமும் உங்களுக்கு பெருமதிப்பு இருந்து வரும் என்பதால் பலரின் அன்புத் தொல்லைக்க்கும் நீங்கள் ஆளாக நேரும்.

பெண்களுக்கு:
குடும்ப நிர்வாகத்தில் பிரச்சனைகள் எதுவும் எழாத வண்ணம் மிக நல்ல முறையில் நடத்திச் செல்வீர்கள். சிலர் விரும்பியவர்களையே மணந்து கொள்ளும் இனிய வாய்ப்பைப் பெறுவீர்கள். மணமான பெண்களில் சிலர் இப்போது மகப்பேறு பாக்யத்தைப் பெற்று மகிழ்வீர்கள். மகளின் அமைப்புகளில் பொறுப்பானதும் பெருமைக்குரியதுமான பதவிகளைச் சிலர் பெறுவீர்கள். சேமிப்புகள் பெருகி மனமகிழ்ச்சியடைவீர்கள் என்றாலும் அதை நம்பகமற்ற சீட்டு கம்பெனிகளில் கொடுத்து ஏமாறாமல் முறையாக வங்கிகளில் சேமிப்பது மிக அவசியம்.

நட்சத்திரப் பலன்கள்.
உத்திராடம்: 2, 3, 4ம் பாதங்கள்:
இந்த் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட காலமாக மனத்தில் இருந்து வந்த சிந்தனைகள் செயல்வடிவம் பெறும். பணப்புழக்கத்தில் திருப்திகரமான நிலை இருந்து வரும். வாகனவசதிகள் சிலருக்கு அமையக்கூடும். மாண்வமணிகள் சிறப்பான முன்னேற்றம் பெற்று சாதனை படைக்கக்கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடைபெறும். அவ்வப்போது ஏற்படக் கூடிய சிறு சச்சரவுகளைப் பெரிதுபடுத்தாமல் விட்டு விடுவதே நன்மை தரும். உடல் நிலையில் பிரச்சனை எதுவும் இராது என்பதால் மருத்துவச் செலவுகள் குறையும். வங்கிகள், வியாபார நிலையங்கள் போன்ற இடங்களில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்களும், மின்சாரம் தொடர்பான இடங்களில் பணிபுரிபவர்களும் எச்சரிக்கையாய் செயல்பட்டு வருவது நல்லது. பெண்களால் சிலர் அனுகூலம் அடைய இடமுண்டு. சகோதர வழியில் மனக்கசப்புகள் நேரலாம்.

திருவோணம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பெரும்பாலான விருப்பங்கள் நிறைவேறக் கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இதுவரை திருமணம் தள்ளிப்போய் வந்தவர்களுக்கு இப்போது நல்ல முறையில் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. சிலர் மகப்பேறு பாக்யத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் உங்கள் மனைவியின் பெயரில் தொழில் அல்லது வியாபாரத்தைத் தொடங்கி உபரி வருமானத்தைப் பெறக்கூடும். எல்லாவகையிலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய நிலை உண்டு. வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரும் போது எதிலும் கவனமாக இருப்பது அவசியம்.

அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் பெரும் ஆதாயம் கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலையில் உயர்நிலை அடையும் வாய்ப்பு உண்டு. அரசு வழியில் எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவாக அமையும். கலைஞர்களில் சிலர் விருதுகளைப் பெறக்கூடிய நிலை உண்டு. பெண்களால் சிலருக்கு நன்மைகள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு எல்லா வகையிலும் பலரும் பொறாமை கொள்ளும் வகையில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களில் சிலர் விருப்ப ஓய்வு பெற்று வேலையிலிருந்து விலகி ஏதேனும் தொழில் தொடங்குவீர்கள்.

பரிகாரம்:

பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். “ஓம் கம் கணபதயே நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

+ வாக்கு வன்மை அதிகரிக்கும் : - சுபநிகழ்ச்சிகளில் சுணக்கம்

ஜோதிடர்

பெருங்குளம் ராமகிருஷ்ணன்

 



Leave a Comment