தைப்பூச ஜோதி தரிசனம் ஜனவரி 30-ந்தேதி தொடங்குகிறது


வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா ஜனவரி 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார். இதை தொடர்ந்து மாதந்தோறும் பூசநட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா ஜனவரி 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல்பாராயணமும், 7.30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும், காலை 10 மணிக்கு ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. பின்னர் 31-ந் தேதி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு தருமச்சாலை மேடையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா ஆகியோர் முன்னிலையில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. பின்னர் 2-ந் தேதி மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையத்தை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.



Leave a Comment