தனியார் ஆன்மீக நிகழ்ச்சிக்கு திருப்பதி லட்டு


திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு, வடை போன்றவற்றை தனியார் நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தனியார் நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு திருப்பதி லட்டு, வடை பிரசாதங்கள் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி ரூ.25க்கான ஒரு லட்டை, 200க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.50 ஆகவும், ரூ.100க்கு விற்பனை செய்யும் கல்யாண உற்சவ லட்டை, 10க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.200 ஆகவும், ரூ.25க்கு விற்கப்படும் வடையை 10க்கு மேல் வாங்கினால் ஒரு வடை ரூ.100 ஆகவும், ரூ.3.50க்கு விற்கப்படும் சிறிய லட்டை 1000க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.7 ஆகவும் விற்பனை செய்ய வேண்டும். மேலும், தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் மேற்கண்ட விலை உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் சிபாரிசு பேரில் கூடுதல் லட்டு பெறும் பக்தர்களுக்கும் விரைவில் லட்டு, வடை பிரசாத விலை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



Leave a Comment