கார்த்திகை மாதத்தின் ஐதீகங்கள்!


கார்த்திகை தீபம்

தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். சூரியன் விருச்சிக இராசிக்குள் புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24 விநாடி அளவே கார்த்திகை மாதமாகும்.

நம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம்.கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.

கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும்ஒரு தீபத் திருநாள் ஆகும்.

மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் கார்த்திகை பௌர்ணமி!

கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.

தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

 

   

கார்த்திகை மாதத்தின்  ஐதீகங்கள்!

திருவண்ணாமலை மகா தீபத்தை பார்த்தால்,அவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக இருக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம்,பவுர்ணமி திதி அன்று ஒட்டு செடி என்ற நாயிருவி வேரினை பறித்து வந்து நமது விட்டிற்குள் வைத்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும் என்பதால்,கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது,தீபம் தானம் செய்வது,வெங்கல பாத்திரம்,தானியம், பழம் தானம் ஆகியவை செய்தால் நமது வீட்டில் செல்வம் சேரும்.

கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.மேலும் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.

கார்த்திகை மாதம் பவ்ர்ணமிக்கு பின் வரும் சோமவாரம்,அல்லது கார்த்திகை  மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பின் வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும்.மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.



Leave a Comment